கத்தியை காட்டி மிரட்டி கடைக்காரரிடம் பணம் பறித்த 3 பேர் கைது.

பெரம்பூர்: கத்தியை காட்டி மிரட்டி மளிகைக் கடைக்காரரிடம் பணம் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொளத்தூர் வரலட்சுமி நகரை சேர்ந்தவர் செல்வம் (40). இவர், அதே பகுதியில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவரது கடைக்குச் சென்ற 3 பேர், இவரிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது செல்வம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். உடனே கத்தியைக் காட்டி மிரட்டி 1,000 ரூபாயை செல்வத்திடம் இருந்து பறித்துச் சென்றனர். இதுகுறித்து செல்வம் கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த கொளத்தூர் இன்ஸ்பெக்டர் லோகநாதன் தலைமையிலான போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் ஏற்கனவே சில குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து கொளத்தூர் பெரியார்நகர் பகுதியைச் சேர்ந்த தீபக் (21), கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (எ) எலி கார்த்திக் (21) மற்றும் கொளத்தூர் வஜ்ரவேல் நகர் பகுதியைச் சேர்ந்த ஜீவா (22) ஆகிய 3 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: