இரண்டு நாளில் டிஸ்சார்ஜ் ஆகிறேன் கொரோனாவில் இருந்து மீண்டார் ஈவிகேஎஸ்.இளங்கோவன்: நலமுடன் இருப்பதாக கூறி வீடியோ வெளியிட்டார்

சென்னை: கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கு செயற்கை ஆக்சிஜன் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் பரவிய நிலையில், அவர் உடல் நலம் தேறி, தான் நலமுடன் இருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும் அதில், 2 நாளில் டிஸ்சார்ஜ் ஆக உள்ளதாக கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ்.இளங்கோவன் திடீர் மூச்சு திணறல் காரணமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 15ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ள அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அவருக்கு, கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், கொரோனா தொற்றில் இருந்து அவர் மீண்டு விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

இந்நிலையில், நுரையீரல் பாதிப்பும் கண்டறியப்பட்டதால் இயல்பான சுவாசம் மேற்கொள்ள முடியாமல் ஈவிகேஎஸ். இளங்கோவன் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்தார். மேலும், ரத்தத்தின் ஆக்சிஜன் அளவை சமநிலைப்படுத்த செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. இதனால் ஈவிகேஎஸ்.இளங்கோவன் உடல் நிலை குறித்த வதந்திகள் பரவியது. இந்நிலையில் நேற்று மருத்துவமனையில் அளிக்கப்பட்ட உடையில் இருக்கும் ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேசிய வீடியோ வெளியானது. அந்த வீடியோவில்,‘‘ நான் நன்றாக இருக்கிறேன். இரண்டு நாளில் டிஸ்சார்ஜ் ஆகிறேன்’’ என்று அவர் கூறியுள்ளார். இதனால் அவர் உடல் நிலை குறித்து தவறான தகவல் பரவியது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து, ஈவிகேஎஸ்.இளங்கோவன் ஆதரவாளரும், முன்னாள் மாவட்ட தலைவருமான வி.ஆர்.சிவராமன் கூறியதாவது: ஈவிகேஎஸ்.இளங்கோவன் மருத்துவ சிகிச்சைக்குப் பின் நலமுடனும் இருக்கிறார். அவருக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவ நிபுணர்கள் அவரது உடல்நலம் நன்றாக இருக்கிறது என்றும், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் எனவும் தெரிவித்தனர். நேற்று அமெட் பல்கலைக்கழக வேந்தரும், காங்கிரஸ் கட்சியின் மாநில துணை தலைவருமான டாக்டர் நாசே ஜே.ராமச்சந்திரன் மருத்துவமனையில் ஈவிகேஎஸ்.இளங்கோவனை சந்தித்து நலம் விசாரித்தார். அவர் பூரண நலத்துடன், அவருக்கே உரிய பாணியில் விரைவில் நம்மை சந்திப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

* நோய்களிலிருந்து மீண்டு விட்டார்

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் உடல் நிலை குறித்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘ ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் கடந்த 15ம்தேதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அப்போது அவருக்கு ரத்த குழாய் நோய், இதய துடிப்பு பாதிப்பு மற்றும் கொரோனா தொற்று பாதிப்பு இருந்தது. அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இப்போது அவருக்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துவிட்டது. மேலும் அவர் இதய துடிப்பு பாதிப்பு, ரத்த குழாய் நோய் ஆகியவற்றிலிருந்து மீண்டு உடல் நலம் தேறி வந்து விட்டார்’’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: