வரதட்சணை கேட்பதாக போலீசில் புகார் கொடுத்ததால் ஆத்திரம் மனைவிக்கு சாணத்தை கொடு்த்து சித்ரவதை: 3 நாள் அறையில் அடைத்து வைத்து கணவன் கொடுமை

ஜெயங்கொண்டம்: அரியலூர் அருகே போலீசில் புகார் கொடுத்ததால் மனைவியை தனி அறையில் அடைத்து 3 நாளாக சித்ரவதை செய்த கணவர் மீது மீண்டும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே விழப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயபாண்டியன்(30). டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ளார். இவரது மனைவி சத்யா (26). டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் படித்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். கணவர், மாமியார் மனோரஞ்சிதம் ஆகியோர் சத்யாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இதுபற்றி கடந்த 10ம்தேதி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சத்யா புகார் கொடுத்தார். போலீசார் கணவர், மாமியாரை அழைத்து எச்சரித்து அனுப்பினர். இதனால் ஆத்திரமடைந்த விஜயபாண்டியன், அவரது தாயார் மனோரஞ்சிதத்துடன் சேர்ந்து மனைவி சத்யாவை 3 நாட்களாக தனிஅறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக சத்யா மீண்டும் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், கணவரும், மாமியாரும்  3 நாட்களாக தனிஅறையில் அடைத்து சித்ரவதை செய்தனர். சாப்பாட்டிற்கு பதிலாக சாணத்தை சாப்பிட சொல்லி கொடுமை படுத்தினர். வேறு ஒருவரோடு தொடர்பில் இருப்பதாக கூறினால், என்னை உடனே விட்டு விடுவதாக அடித்து மிரட்டினர். இதனால் உயிருக்கு பயந்து ஒத்துக்கொள்வதுபோல் பேசியதை வீடியோவில் பதிவு செய்தனர்.

தொடர்ந்து எனது கணவர், அவரது தாய், தாய்மாமன் பரமசிவம், உறவினர் தர்மலிங்கம் ஆகியோர் சேர்ந்து  ரூ.12 லட்சம், சிதம்பரத்தில் இருக்கும் வீடு மற்றும் 10 பவுன் நகையுடன் வந்தால்தான் வாழமுடியும் என்கின்றனர். இதுபற்றி காவல் நிலையத்தில் புகார் செய்தால் உனது வீடியோவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விடுவதாக மிரட்டுகின்றனர். எனக்கு சொந்தமான 20 சவரன் நகையை பறித்துக்கொண்டனர் என  குறிப்பிட்டிருந்தார். இந்த புகாரின் பேரில் 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக சத்யாவின் கணவர் விஜயபாண்டியனை நேற்றுமுன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: