கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட ஜெகனை கொலை செய்த சங்கர் வீட்டை சூறையாடிய ஜெகனின் உறவினர்கள்

கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட ஜெகனை கொலை செய்த சங்கர் வீட்டை சூறையாடிய ஜெகனின் உறவினர்கள்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞரை கொலை செய்த சங்கர் என்பவர் நேற்று கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்நிலையில் உயிரிழந்த ஜெகனின் உறவினர்கள் சங்கரின் வீட்டில் பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடியுள்ளனர். மேலும் உடற்கூறாய்வு முடிந்த பிறகு உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிருஷ்ணகிரி அருகே உள்ள கிட்டம்பட்டியை சேர்ந்தவர் ஜெகன் டைல்ஸ் ஓடும் தொழிலாளியான கிருஷ்ணகிரி அவதானப்பட்டி அருகே உள்ள முழுக்கான் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் சரண்யா என்பவரும் காதலித்து வந்தனர். பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஜெகனும் சரண்யாவும் திருமணம் செய்து கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த சரண்யாவின் தந்தை சங்கர், கிருஷ்ணகிரி டேம் ரோடு அருகே பட்டப்பகலில் தனது மருமகனை வெட்டி கொலை செய்தார்.

இதனை அடுத்து கொலை செய்த சங்கர் கிருஷ்ணகிரி மகளிர் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். விசாரணை முடிவடைந்ததை அடுத்து சேலம் சிறைக்கு சங்கர் கொண்டு செல்லப்பட்டார். மேலும் சங்கருடன் சேர்த்து கொலை செய்த 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

இந்நிலையில், உயிரிழந்த ஜெகனின் உறவினர்கள் அவதானப்பட்டியில் உள்ள சங்கரின் வீட்டிற்குள் நுழைந்து, அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளதை அடுத்து போலீசார் சங்கர் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள ஜெகனின் பிரேதத்தை உடற்கூறாய்வு செய்து வருகின்றனர். ஜெகனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: