தண்டையார்பேட்டை: ராயபுரம் மேம்பாலம் அருகே ரூ.2.13 கோடி செலவில் மாடிப்பூங்கா சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இது விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது. சென்னை ராயபுரத்தில் ஸ்டான்லி மருத்துவமனை அருகே, கடந்த 1772ம் ஆண்டு நகர பாதுகாப்புக்காக பெரிய சுவர் பிரிட்டிஷ் அரசால் கட்டப்பட்டது. சென்னை நகர வளர்ச்சியால் சுவர் சிறியதாகி, பின்னர் பூங்காவாக மாறிவிட்டது. பின்னர், 1957ம் ஆண்டு நவம்பரில், நீதிபதி ராஜகோபாலன் என்பவரால் மாடிப் பூங்காவாக சென்னை நகராண்மை கழகத்தின் கீழ் திறந்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து, 1968ம் ஆண்டு வண்ண நீருற்று அமைக்கப்பட்டது. 2001ம் ஆண்டு 15 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு, அப்போது மேயராக இருந்த மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. மீண்டும் 10 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு, 2009ம் ஆண்டு அப்போதைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. சுமார் 6,865 சதுர மீட்டர் பரப்பளவில், பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த மாடிப்பூங்கா முறையான பராமரிப்பின்றி காணப்பட்டது. இதனை சீரைமக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். அதன்பேரில், 2.13 கோடி ரூபாய் மதிப்பில் மாடி பூங்கா சீரமைக்கப்பட்டு வருகிறது.