அம்பத்தூர்: திருமுல்லைவாயல் ரயில் நிலையத்தில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருமுல்லைவாயல் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பதாக நேற்று அம்பத்தூர் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அம்பத்தூர் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் தனம்மாள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அந்த பகுதி முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது திருமுல்லைவாயல் ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால், அவர்கள் வைத்திருந்த 2 பைகளை சோதனை செய்தபோது, 16 கிலோ கஞ்சா இருந்தது. அதை பறிமுதல் செய்தனர். விசாரணையில், ஆவடி அடுத்த வீராபுரத்தை சேர்ந்த சூரியகுமார் (25), கொடுங்கையூரை சேர்ந்த மணிகண்டன் (25) என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.