சென்னை: விபத்தில் சிக்கும் பொதுமக்களை வழக்கு தொடர செய்து, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வந்த பள்ளிக்கரணை போக்குவரத்து பெண் ஆய்வாளர் பணியில் இருந்து விடுவித்து, தாம்பரம் சரக கூடுதல் ஆணையர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். தாம்பரம் காவல் ஆணையரகம் அமைக்கப்பட்ட பிறகு, விபத்துகள் குறித்து விசாரணை செய்ய பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு புதிதாக தொடங்கப்பட்டது. இங்கு சில மாதங்களுக்கு முன் இன்ஸ்பெக்டராக ராணி பணி அமர்த்தப்பட்டார். இவர், காவல்துறை சார்பில், ஒதுக்கப்பட்ட ஜீப்பை ஓட்டுவதற்கு, தனது சொந்த செலவில் டிரைவர் ஒருவரை நியமித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும், தனது சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் விபத்து நடந்தால், தான் நியமித்த டிரைவரை அழைத்துக்கொண்டு, அலுவலக ஜீப்பில் சம்பவ இடத்திற்கு செல்வது, விபத்து நடந்த இடத்திற்கு வேண்டிய வழக்கறிஞர்களை அழைத்து சென்று, பிறகு வழக்குப்பதிவு செய்து, இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடருமாறு பாதிக்கப்பட்ட பொதுமக்களை அறிவுறுத்தி வந்துள்ளார். இதை ஏற்க மறுக்கும் பொதுமக்களை ஆய்வாளர் என்ற முறையில், அவர் மிரட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இழப்பீடாக கிடைக்கும் பணத்தில், ஒரு பகுதியை லஞ்சமாக அவர் பெற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.