திருமலை : ஆந்திரா கடப்பாவில் 23 செம்மரக்கட்டைகளை கடத்திய 5 பேர் கொண்ட கும்பலை கைது செய்து கார் மற்றும் பைக்கை அதிரடிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆந்திரா மாநிலத்தில் செம்மரக்கடத்தல் அதிரடிப்படை எஸ்பி சக்கரவர்த்தி உத்தரவின்படி, ஆர்.ஐ. சிரஞ்சீவி தலைமையிலான ஆர்.எஸ்.ஐ ராகவேந்திரா குழுவினர் கடப்பா மாவட்டம் பொருமாமில்லா வனப்பகுதியில் உள்ள தெக்குரு பேட்டா வழியாக காவலக்குண்ட்லா பகுதியில் நேற்று காலை ரோந்து சென்றனர். அப்போது கொம்மினேனி ரஸ்தா இடதுபுறத்தில் ஒரு காரும், பைக்கும் நின்று கொண்டிருந்தன. சந்தேகம் அடைந்த போலீசார் அங்கு சென்று பார்த்தபோது சிலர் செம்மரக்கட்டைகளை காரில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.