சென்னை: தமிழ்நாட்டில் விளையாட்டு நகரம் அமைய உள்ள இடம் விரைவில் இறுதி செய்யப்படும் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வரலாற்று சிறப்பு மிக்க விக்டோரியா பொது அரங்கம் சிங்கார சென்னை 2.O திட்டத்தின் கீழ் தொன்மை மாறாமல் மறுசீரமைக்கப்பட உள்ளது. இந்த பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு உடன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி நேரு மைதானத்தை மறுசீரமைக்க பட்ஜெட்டில் ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார். நேரு விளையாட்டு அரங்கின் விளக்குகளை மாற்ற ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட்டு விட்டதாகவும் உதயநிதி தெரிவித்தார். விளையாட்டு நகரம் அமைக்க 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக கூறிய அவர் இதில் விரைவில் ஒரு இடம் உறுதி செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.