அடுத்த இரண்டு ஆண்டுகளில் நீர்நிலைகள், குளங்கள், ஊரணிகள் ரூ.800 கோடியில் புதுப்பிக்கப்படும்

சென்னை: தமிழக பட்ஜெட் தாக்கலின் போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது: அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10,000 கி.மீ. சாலைகளின் தரத்தை மேம்படுத்தி, ஊரகப்பகுதிகளில் சிறப்பான சாலை வசதிகளையும், பொருளாதார மேம்பாட்டையும் உறுதிசெய்திட முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தை தமிழ்நாடு அரசு இவ்வாண்டு தொடங்கியுள்ளது. அதன்படி, முக்கியமான இணைப்புச் சாலைகள், பேருந்துகள் இயங்கும் சாலைகள் தரம் உயர்த்தப்படும். வரும் நிதியாண்டில், ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் 5,145 கி.மீ. சாலைகளுக்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.

அதேபோல, கிராமப்புரங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளில், 6,618 நீர்நிலைகளில் மொத்தம் ரூ.638 கோடி மதிப்பீட்டில் சீரமைப்புப் பணிகள் செய்யப்பட்டுள்ளன. அடுத்த இரண்டு ஆண்டுகளில், மேலும், 10,000 சிறிய நீர் நிலைகள்,  குளங்கள், ஊரணிகள் ரூ.800 கோடி செலவில் புதுப்பிக்கப்படும். வீட்டுவரி, தொழில் வரி, குடிநீர் வரியை ஊராட்சிகளுக்கு இணையவழியில் எளிதில் செலுத்துவதற்கு ஒரு வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விரைவில், கட்டட வரைபடம், மனை வரைபட அனுமதிகளையும் இணைய வழியில் பெற வழிவகை செய்யப்படும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், இதுவரை ரூ.10,914 கோடி செலவில் ரூ.30.87 கோடி வேலை நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி, 2023-24ம் ஆண்டில், இத்திட்டத்தின் கீழ், 35 கோடி வேலை நாட்கள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பீடுகளில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு ரூ.22,562 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: