வரலாற்று சாதனை தங்கம் சவரன் ரூ.44,640 ஆனது: நகை வாங்குவோர் அதிர்ச்சி

சென்னை: தங்கம் விலை நேற்றும் அதிகரித்து சவரன் ரூ.44,640க்கு விற்பனையானது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகபட்ச விலையாகும். தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக உயர்வை சந்தித்து வருகிறது. 14ம் தேதி தங்கம் விலை சவரன் ரூ.43,120க்கு விற்றது. கடந்த 18ம் தேதி தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்தது. அதாவது, கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,560க்கும், சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,480க்கும் விற்கப்பட்டது.

கடந்த 10ம் தேதி முதல் 18ம் தேதி வரை தொடர்ந்து 9 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.2,960 உயர்ந்தது. தங்கத்தின் அதிகப்பட்ச விலையாக ஒரு சவரன் ரூ.43 ஆயிரத்து 360 தான் இதுவரை சாதனையாக இருந்து வந்தது. அதாவது, கடந்த 2020 ஆகஸ்ட் 7ம் தேதி இந்த சாதனையை தங்கம் விலை படைத்தது. இந்த சாதனையை கடந்த 18ம் தேதி தங்கம் விலை முறியடித்து புதிய உச்சத்தை தொட்டது.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலை மேலும் உயர்ந்து காணப்பட்டது. அதாவது, கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5580க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,640க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில், தங்கம் விலை மேலும் வரலாற்று சாதனையை படைத்தது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நகை வாங்குவோரை அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Related Stories: