காதலை கண்டித்த தம்பியை கொன்று 20 துண்டுகளாக வெட்டி வீசிய அக்கா: 8 ஆண்டுக்கு பின் காதலனுடன் கைது

பெங்களூரு: கர்நாடக மாநிலம், விஜயபுரா மாவட்டம்  தேவனாங்காவ் கிராமத்தை சேர்ந்தவர் சித்தப்பா பூசாரி.  சித்தப்பா பூசாரி மகள் பாக்கியஸ்ரீ (31). இவரும் அதே பகுதியில் உள்ள சாசாபாலு கிராமத்தை சேர்ந்த  சங்கரப்பா தளவார் (32) என்பவரும் கல்லூரியில் படித்த போதிருந்தே காதலித்து வந்தனர். பல ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்ய முடிவெடுத்தபோது, சாதியை காரணம் காட்டி அவர்களது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் பிரிந்துவிட்டனர். சங்கரப்பா தளவார் திருமணமாகி 6 மாதத்தில் மனைவியை பிரிந்த பின்னர் தனது கிராமத்திலிருந்து கர்நாடக மாநில எல்லையான ஜிகினி தொழிற்பேட்டைக்கு வேலைக்கு சேர்ந்தார். பாக்கியஸ்ரீ யும் வந்து அவருடன் குடும்பம் நடத்தியுள்ளார்.

தகவலறிந்து கடந்த 2015ல் ஜிகினி வந்த பாக்கியஸ்ரீ யின் தம்பி லிங்கராஜ் (22) தனது அக்காளை கண்டித்துள்ளார். தங்களது உறவுக்கு லிங்கராஜ் இடையூறாக இருப்பதாக கருதிய பாக்கியஸ்ரீ , சங்கரப்பாவுடன் சேர்ந்து லிங்கராஜை அடித்து கொலை செய்து, அவரது உடலை 20 துண்டுகளாக வெட்டி 3 பையில் அடைத்து அதனை ஜிகினி மற்றும் அருகில் உள்ள மஞ்சனஹள்ளி ஏரியில் இருவரும் வீசியுள்ளனர். பின்னர் பாக்கியஸ்ரீ யும், சங்கரப்பாவும் ஜிகினியில் இருந்து தப்பி, மகராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் கடந்த 8 ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்க்கை நடத்தி வந்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து ஜிகினி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், அவர்கள் இருவரும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருப்பதை அறிந்து நேற்று முன்தினம் போலீசார் அங்கு சென்று பாக்கியஸ்ரீ (39), மற்றும் சங்கரப்பா(40) ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை சிறையில் அடைத்தனர். தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால், தம்பியை அவரது அக்காவே   அடித்துக் கொன்று, 8 ஆண்டுகளுக்கு பின் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: