உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நாளை சிறப்பு கிராம சபை கூட்டம்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்:  திருவள்ளுர் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும்  உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நாளை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது என்று கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, இதில், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது, தண்ணீர் தினத்தின் கருப்பொருளைப் பற்றி விவாதிப்பது, கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதிப்பது, கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை ஒப்புதல் பெறுவது, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதிக்க வேண்டும்.

மேலும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கிராம வளர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), சுகாதாரம், ஜல் ஜீவன் இயக்கம் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்க வேண்டும். இந்த கிராம சபைக் கூட்டங்களில் அவ்வூராட்சியில் வாழும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் கலந்து கொள்வது முக்கிய கடமையாகும். மேலும், கிராமசபை விவாதங்களில் பங்கேற்று, பயனாளிகள் தேர்வு மற்றும் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும். கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ளும்போது உரிய கொரோனா தடுப்பு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து, தவறாமல் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என்றார்.

Related Stories: