இன்று முதல் ஏப்.21 வரை 20 நாட்கள் பேரவை கூட்டம்: சபாநாயகர் அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று முதல் ஏப்ரல் 21ம் தேதி வரை 20 நாட்கள் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து பட்ஜெட் கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து விவாதிக்க சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு குழுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்த பிறகு சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:

இன்று (21ம் தேதி) காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியதும், 2023-24ம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்வார்.

22ம் தேதி: அரசு விடுமுறை

23ம் தேதி இரங்கல் தீர்மானம், 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கை மீது பொது விவாதம்.

24ம் தேதி: நிதிநிலை அறிக்கை மீது பொது விவாதம்

25, 26ம் தேதி: அரசு விடுமுறை.

27ம் தேதி (திங்கள்): நிதிநிலை அறிக்கை மீது பொது விவாதம்

28ம் தேதி: நிதிநிலை அறிக்கை மீது பொது விவாதத்திற்கு பதிலுரை மற்றும் 2022-23ம் ஆண்டின் கூடுதல் செலவிற்கான மானிய கோரிக்கை குறித்த நிதி ஒதுக்க சட்டமுன்வடிவு அறிமுகம் செய்து, நிறைவேற்றப்படும்.

* 29ம் தேதி முதல் ஏப்ரல் 21ம் தேதி வரை மானிய கோரிக்கைகளின் மீது விவாதமும் வாக்கெடுப்பும். அதன்படி,

29ம் தேதி: காலை - நீர்வளத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை. மாலை - போக்குவரத்து துறை

30ம் தேதி: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை

31ம் தேதி: உயர் கல்வி துறை, பள்ளி கல்வி துறை

ஏப்ரல் 1ம் தேதி: நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, பொதுப்பணித்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் எண்மய சேவைகள் துறை

2,3,4ம் தேதி: கூட்டம் இல்லை.

5ம் தேதி: வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை, மீன்வளம், பால்வளம்

6ம் தேதி: காலை - வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர்தணிப்பு. மாலை - கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு

7, 8, 9ம் தேதி: கூட்டம் இல்லை.

10ம் தேதி: காலை - தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை, தமிழ் வளர்ச்சி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை. மாலை - செய்தி மற்றும் விளம்பரம், வணிகவரிகள், முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவு

11ம் தேதி: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, சிறப்பு திட்ட செயலாக்க துறை, கைத்தறி மற்றும் துணிநூல்

12ம் தேதி: காலை - நீதி நிர்வாகம், சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள், சட்டத்துறை. மாலை - எரிசக்தி துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை

13ம் தேதி: காலை - வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், வனம். மாலை - பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, கதர், கிராம தொழில்கள் மற்றும் கைவினை பொருட்கள்

14, 15, 16ம் தேதி: அரசு விடுமுறை என்பதால் பேரவை கூட்டம் இல்லை.

17ம் தேதி: மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை

18ம் தேதி: காலை - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை. மாலை - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை

19ம் தேதி: காலை - சுற்றுலா, கலை மற்றும் பண்பாடு, இந்து சமய அறநிலைய துறை. மாலை - திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, பொதுத்துறை, மாநில சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித்துறை, ஓய்வூதியங்களும், ஏனைய ஓய்வுக்கால நன்மைகளும்.

20ம் தேதி: காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள்

21ம் தேதி: காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை விவாதத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசுவார். மேலும் அன்றைய தினம் அரசினர் சட்டமுன்வடிவுகள் ஆய்வு செய்தலும், நிறைவேற்றுதல் மற்றும் ஏனைய அரசினர் அலுவல்கள். பேரவை காலையில் 10 மணிக்கும், மாலையில் 4 மணிக்கும் கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: