அதிமுக ஆட்சியின் இருண்ட கால நிதிநிலைமையை சீர்செய்து தமிழ்நாட்டை தலைநிமிர வைக்கும் நிதிநிலை அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

சென்னை: தமிழ்நாட்டை தலைநிமிர  வைக்கும் நிதிநிலை அறிக்கை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: ‘திராவிட மாடல்’ என்ற கருத்தியலுக்கு முழுமையான எடுத்துக்காட்டு, இந்த நிதிநிலை அறிக்கை. திமுக தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு ரூ.1000 உரிமைத்தொகை மாதம்தோறும் வழங்கப்படும் என அறிவித்திருந்தோம். 2011-21 வரை 10 ஆண்டு இருண்ட கால அதிமுக ஆட்சி தமிழ்நாட்டில் ஏற்படுத்தி வைத்துவிட்டு போன நிர்வாகச் சீர்கேடு மற்றும் நிதிச்சீரழிவுகள் காரணமாக, ஆட்சிப் பொறுப்பேற்றதும் ரூ.1000 உரிமையைத் தொகையை வழங்க இயலவில்லை. நிர்வாகத்தைச் சரிசெய்து, நிதியையும் சரிசெய்ய திமுக அரசுக்குக் கால அவகாசம் தேவைப்பட்டது.

திமுக ஆட்சிக்கு வரும் போது ரூ.62 ஆயிரம் கோடியாக இருந்த வருவாய்ப் பற்றாக்குறையை நடப்பு மதிப்பீடுகளில் ரூ.30 ஆயிரம் கோடியாகக் குறைத்துள்ளோம். தமிழ்நாட்டை நோக்கி ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான புதிய தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளோம். தொழில் வளர்ச்சி பெருகியுள்ளது. வேளாண் உற்பத்தி பெருகி இருக்கிறது. பொதுமக்களின் சமூகப் பங்களிப்பு பெருகி உள்ளது. இதன் மூலமாகத் தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறி வருகிறது. இந்த முன்னேற்றத்தின் அடையாளமாக நிதியும் ஓரளவு தன்னிறைவு பெரும் சூழலை எட்டி வருகிறது. இந்த நிலையில் மக்களுக்கு அளித்த மிக முக்கியமான வாக்குறுதியான ரூ.1000 உரிமைத்தொகை என்பதை அறிவித்துள்ளோம். இதற்கு முதல் கட்டமாக ரூ.7000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மகளிர் வாழ்வில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தப் போகும் மகத்தான அறிவிப்பாக இது இந்த நிதிநிலை அறிக்கையில் அமைந்துள்ளது.

பள்ளி மாணவர்க்கு காலை உணவுத் திட்டம், அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்விக்கு வரும் மாணவியர்க்கு ரூ.1000, குடிமைப் பணித் தேர்வுக்குப் பயிற்சி பெறும் தேர்வாளர்களுக்கு மாதம்தோறும் ரூ.7500, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத் தொழில் முனைவோரை உருவாக்க அண்ணல் அம்பேத்கர் பெயரால் திட்டம், புதிரை வண்ணார் நல வாரியம் புத்துயிர்ப்பு, ஆதி திராவிடர் குடியிருப்புகளையும், அவர்தம் சமுதாய வளர்ச்சியை ஊக்குவிக்கவும் அயோத்திதாசப் பண்டிதர் பெயரால் மேம்பாட்டுத் திட்டம், பின்தங்கிய வட்டாரங்களை வளர்க்க வளமிகு வட்டாரங்கள் திட்டம், சென்னையைச் சீராக வளர்க்க வடசென்னை வளர்ச்சித் திட்டம், இலங்கைத் தமிழர்க்கு 3,959 வீடுகளைக் கட்டித் தருதல், சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் 1 லட்சம் பேருக்குக் கூடுதலாக வழங்குதல், பெண் தொழில்முனைவோர்க்கான புத்தொழில் இயக்கம், மாற்றுத்திறனாளிகள் - சிறுபான்மையினர் - பிற்படுத்தப்பட்டோருக்கான திட்டங்கள் எனத் தமிழ்நாட்டில் அனைத்துச் சமூகங்களையும், அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது.

அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடும் திட்டம், தலைவர் கலைஞர் பெயரால் மதுரையில் மாபெரும் நூலகம், மொழிப்போர்த் தியாகிகளுக்கு சென்னையில் நினைவிடம், தமிழ்க் கணினி பன்னாட்டு மாநாடு, தமிழர் பண்பாட்டுக் கடல் வழிப் பயணங்கள் ஊக்குவிப்பு, அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்குக் கட்டணமில்லாப் பேருந்துப் பயணம், சங்கமம் விழா, நாட்டுப்புறக் கலைப்பயிற்சி மையங்கள், தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் ஆகிய தமிழ் - தமிழர் அறிவு மேம்பாட்டுத் திட்டங்களை முன்னெடுக்கும் அறிக்கையாக இது அமைந்துள்ளது.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு, கோவையிலும் மதுரையிலும் மெட்ரோ ரயில், சென்னையில் பேருந்து பணிமனைகள், 1000 புதிய பேருந்துகள், புதிய ரயில் திட்டங்களுக்கான முன்னெடுப்புகள், சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையில் நான்குவழி மேம்பாலம், சென்னை தீவுத்திடலில் இயற்கை வனப்பு உருவாக்கம், கோவையில் செம்மொழிப்பூங்கா, அடையாறு ஆற்றில் மறுசீரமைப்புப் பணிகள், ரூ.320 கோடி  மதிப்பில் நீர்வழிகள் தூர்வாருதல், 15 நீரேற்று மின் திட்டங்கள், சேலத்தில் ஜவுளிப் பூங்கா, புதிய சிப்காட் பூங்காக்கள், தொழில்நுட்ப நகரங்கள், தகவல் தொழில் நுட்பப் பூங்காக்கள் எனப் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முன்னெடுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது தமிழ்நாட்டின் ஒவ்வொரு தனிமனிதர் நலனை உள்ளடக்கியும் ஒட்டு மொத்தத் தமிழ்நாட்டின் வளர்ச்சியை மனதில் வைத்தும் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. நிகழ்காலத்துக்காக மட்டுமல்ல, எதிர்காலத்தையும் உள்ளடக்கியதாக இந்தத் திட்டங்கள் அமைந்துள்ளன. மகளிர், மாணவ - மாணவியர், இளைஞர், ஏழை எளிய விளிம்பு நிலை மக்களைக் கை தூக்கிவிடுவதன் மூலமாக அவர்களை மட்டுமல்ல, அவர்கள் வழியில் வர இருக்கிற தலைமுறையையும் சேர்த்து இந்த நிதிநிலை அறிக்கை வளர்த்தெடுக்க இருக்கிறது. இதனைத் தான் ஒற்றைச் சொல்லாக ‘திராவிட மாடல்’ என்று நாங்கள் சொல்கிறோம்.

எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, ‘மின்மினிப் பூச்சியைப் போன்றது இந்த அறிக்கை மின்மினிப் பூச்சியில் இருந்து வெளிச்சம் கிடைக்காது’ என்று சொல்லி இருக்கிறார். திமுக அரசு வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை என்பது உதயசூரியனைப் போல் அனைவருக்கும் ஒளியூட்டக் கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல. அதிமுக ஆட்சியில் இருண்டகால நிதிநிலைமையைச் சீர்செய்தும், முன்னேற்றியும், முற்போக்கான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியும், தமிழ்நாட்டை தலைநிமிர வைக்கும் நிதிநிலை அறிக்கையை உருவாக்கிய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்க்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு உறுதுணையாக இருந்த நிதித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் முருகானந்தம், நிதித்துறையின் பிற அலுவலர்களுக்கு நன்றியும், பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது தமிழ்நாட்டின் ஒவ்வொரு தனிமனிதர் நலனை உள்ளடக்கியும் ஒட்டு மொத்தத் தமிழ்நாட்டின் வளர்ச்சியை மனதில் வைத்தும் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.

Related Stories: