பி.எம்., மித்ரா திட்டம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்: ஜவுளி மண்டலம், ஆடை பூங்காவை சிப்காட் மூலம் செயல்படுத்த கோரிக்கை

சென்னை: தமிழ்நாட்டில், ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப்பூங்கா திட்டத்தினை சிப்காட் மூலம் செயல்படுத்தக்கோரி பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம்:

தமிழ்நாட்டில் பி.எம்., மித்ரா பூங்காவினை அமைக்க விருதுநகர் இ.குமாரலிங்கபுரம் கிராமத்தினைத் தேர்வு செய்ததற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், இப்பூங்காவின் மூலமாக தமிழ்நாட்டின் தென்மாவட்டங்கள் பெரிதும் பயனடையும்.  

தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளுக்குத் தேவையான நிலங்கள் மற்றும்  உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடும் முகமையாகச் செயல்படும், சிப்காட் பூங்கா அமையவுள்ள இடத்தில் ஏற்கெனவே 1,052 ஏக்கர் நிலத்தினை தன்வசம் வைத்துள்ளது. அதன்படி, அந்நிறுவனம் இந்தத் திட்டத்தை உடனடியாக அங்கு செயல்படுத்த தயாராக உள்ளது. மேலும், தமிழ்நாட்டில் சிப்காட் நிறுவனம் பெரிய தொழில் பூங்காவை நிறுவி, தனது திறனை நிரூபித்துள்ளது.  தற்போது மாநிலத்தில், 2,890 நிறுவனங்கள் 3,94,785 பணியாளர்களுடன், 38,522 ஏக்கரில் 28 தொழிற்பேட்டைகளை அந்நிறுவனம்  நிறுவியுள்ளது. தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் சிப்காட் நிறுவனத்தால் உருவாக்கப்படும் தொழிற் பூங்காக்களில் தொழில் தொடங்க விரும்புகின்றன.

தமிழ்நாட்டில், தனியாரால் மேம்படுத்தப்பட்டுள்ள தொழிற் பூங்காக்கள் குறைந்த அளவிலேயே வெற்றியைக் கண்டுள்ளது. மேலும், பி.எம்., மித்ரா பூங்காவினை சிப்காட் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தினால், இந்தத் திட்டத்தின் நோக்கங்களை வெற்றிகரமாக அடைந்திட இயலும் என்று தமிழ்நாடு அரசு உறுதியாக நம்புகிறது. எனவே, இந்தத் திட்டத்தினைச் செயல்படுத்துவதற்குத் தேவையான நிலங்களை தன்வசம் வைத்துள்ள சிப்காட் நிறுவனம், ஏற்கெனவே பல்வேறு சாதனை நிகழ்த்தியுள்ளது. தமிழ்நாட்டில் சிப்காட் நிறுவனத்தின்மூலம், பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா (பி.எம். மித்ரா) திட்டத்தினைச் செயல்படுத்திட வேண்டுமென்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஒன்றிய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலையும் கேட்டுக்கொள்கிறேன்.

Related Stories: