மும்பை: மகளிர் பிரிமியர் லீக் டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் நேற்று மோதிய யுபி வாரியர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற வாரியர்ஸ் முதலில் பந்துவீசியது. ராஜேஷ்வரி, சோபி, தீப்தி ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய மும்பை இந்தியன்ஸ், 20 ஓவரில் 127 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. தொடக்க வீராங்கனை ஹேலி மேத்யூஸ் அதிகபட்சமாக 35 ரன் (30 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். இஸ்ஸி வாங் 32 ரன் (19 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 25 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஜின்டிமணி கலிதா 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். வாரியர்ஸ் பந்துவீச்சில் சோபி எக்லஸ்டோன் 3, தீப்தி ஷர்மா, ராஜேஷ்வரி கெயக்வாட் தலா 2, அஞ்சலி சர்வனி 1 விக்கெட் வீழ்த்தினர்.