திருவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே மல்லியை சேர்ந்தவர் ராஜவர்மன். சாத்தூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ. இவர், தனது நண்பர்கள் சிலருடன், கடந்த 2018ல் ரவிச்சந்திரன் என்பவர் நடத்தும் பட்டாசு தொழிற்சாலையில் பங்குதாரராக சேர்ந்தார். அதன்பின் ஒரு வாரம் கழித்து, தங்களால் தொழிலில் கவனம் செலுத்த முடியவில்லை என ராஜவர்மன் உள்பட 3 பேர் ரவிச்சந்திரனிடம் தெரிவித்தனர். இதையடுத்து ரவிச்சந்திரன் மூவருக்கும் உரிய பங்கு தொகையை கொடுத்துவிட்டு, பட்டாசு தொழிற்சாலையை நடத்தி வந்தார். பட்டாசு தொழில் நல்லபடியாக நடந்து வந்த நிலையில், ராஜவர்மன் மற்றும் அவரது நண்பர்கள், போலியான ஆவணங்களை தயாரித்து, ரவிச்சந்திரனிடம் தாங்கள் இன்னும் பங்குதாரராக உள்ளோம் என கூறி அவரை கடத்தி சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர்.