இஸ்லாமாபாத்: நீதிமன்றத்தில் சரணடைந்தால் கைது நடவடிக்கையில் இருந்து தடுக்க முடியும் என இம்ரான் கானுக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக இருந்த போது வெளிநாட்டு தலைவர்கள், முக்கிய பிரமுகர்களிடம் இருந்து பெறப்பட்ட பரிசுகளை அரசு கருவூலத்தில் சேர்க்காமல் அவற்றை விற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் ஆஜராகாததால் அவருக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. அதே போல் பெண் நீதிபதியை மிரட்டிய வழக்கிலும் வாரன்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்குகளில் அவரை கைது செய்ய போலீசார் அவர் வீட்டுக்கு சென்ற போது தெஹ்ரீக் இன்சாப் கட்சி தொண்டர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் இருதரப்பினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டதில் 60 பேர் படுகாயமடைந்தனர்.