சென்னை: வைரஸ் காய்ச்சல் காரணமாக தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை விடவேண்டிய அவசியம் தற்போது இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நாட்டின் பல மாநிலங்களில் புது வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இது H3N2 வைரஸ் என அழைக்கப்படுகிறது. இந்த புது வகை வைரஸ் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரை தான் அதிகம் தாக்கும் என சொல்லப்படுகிறது. முன்னதாக 1 முதல் 9-ம் வகுப்பு வரை இருக்க கூடிய மாணவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் பரவி வர கூடிய சூழலில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தேர்வுகளை முன்கூட்டியே நடத்துவது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் பள்ளிக்கல்வி துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.