குமரி போதகரின் ஆபாச வீடியோக்கள்: இளம்பெண்களை மிரட்டி பாலியல் தொல்லை; ஏடிஎஸ்பி விசாரணை

நாகர்கோவில்: குமரி மத போதகரின் பல ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் ஏடிஎஸ்பி விசாரணை நடத்த உள்ளார். குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே மத போதகர் ஒருவர், இளம்பெண்ணுடன் வாட்ஸ் அப் வீடியோ காலில் உரையாடல் மற்றும் பாலியல் ரீதியான சீண்டல்கள், பாலியல் தொடர்பான குறுஞ்செய்திகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம், குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்த பெண் ஒருவர், சம்பந்தப்பட்ட போதகர் மீது பல்வேறு புகார்களை கூறி உள்ளார்.

அந்த மத போதகர் பாலியல் ரீதியாக இளம்பெண் ஒருவரை தொல்லை செய்ததாகவும், இதனால் அந்த பெண் தற்கொலை முடிவில் இருப்பதாகவும் கூறி உள்ளார். இதை தட்டிக்கேட்டதால் போலீசில் பொய் புகார் கொடுத்து தனது மகனை கைது செய்ய வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் சில வீடியோ காட்சிகள், வாட்ஸ் அப் உரையாடல்கள் தொடர்பான ஆவணங்களையும் அந்த புகார் மனுவுடன் இணைத்துள்ளார். இது தொடர்பாக தற்போது ஏடிஎஸ்பி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகள், வாட்ஸ் அப் உரையாடல்கள் தொடர்பாக சைபர் க்ரைம் போலீசாரும் விசாரிக்கின்றனர்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட போதகர் தொடர்பாக மேலும் பல புதிய வீடியோக்கள், வாட்ஸ் அப் உரையாடல்கள், வாட்ஸ் அப் குறுஞ்செய்திகள் சமூக வலை தளங்களில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறுகையில், ஏற்கனவே சம்பந்தப்பட்ட போதகர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை சிலர் மீது கைது நடவடிக்கை எடுத்துள்ளது. போதகர் மீது பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் இதுவரை நேரடியாக வந்து புகார் தரவில்லை. ஒரு பெண் அளித்துள்ள புகார் தொடர்பாக ஏடிஎஸ்பி விசாரிக்க உள்ளார். விசாரணைக்கு பிறகு தான் உண்மை தெரிய வரும் பாதிக்கப்பட்ட பெண்கள் நேரடியாக எஸ்.பி.யிடம் வந்து புகார் அளிக்கும் பட்சத்தில்  உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Related Stories: