ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தியவர் கைது

வளசரவாக்கம்: ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஆந்திராவில் இருந்து சென்னைக்கு ஆம்னி பேருந்தில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக, அண்ணாநகர் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் மனோகர் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் மாறுவேடத்தில் கண்காணித்தனர்.

அப்போது, சந்தேகத்திற்கிடமாக  ஒரு வாலிபர், பெரிய பார்சல்களுடன் தனியார் பஸ்சில் ஏறினார். இதையடுத்து, போலீசார் அவரை மடக்கி பிடித்து அவர் வைத்திருந்த பார்சலை சோதனை செய்தனர். இதில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அவர் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த லோகநாதன் (எ) வீரப்பன் (24) என்பதும், ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து நாமக்கல் மாவட்டம் பகுதியில் விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. போலீசார் அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: