மீரட்: தொழிலதிபர் ஒருவரிடம் உத்தரபிரதேச ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் ரூ. 20 லட்சம் லஞ்சம் கேட்கும் வீடியோவை அகிலேஷ் யாதவ் வெளியிட்டதை, பழைய வீடியோ என்று போலீசார் தெரிவித்துள்ளனர். உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் போலீஸ் அதிகாரி அனிருத் சிங் என்பவர், வீடியோ காலில் தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் கேட்கும் வீடியோவை சமாஜ்வாதி கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ‘உத்தரபிரதேச ஐ.பி.எஸ் அதிகாரி மீது புல்டோசர் பாயுமா? அல்லது தலைமறைவான ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர் பட்டியலில் மேலும் ஒருவரது பெயர் சேர்க்கப்படுமா? இந்த விஷயத்தை ஆளும் பாஜக அரசும் தெளிவுபடுத்த வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.