வண்ணாரப்பேட்டையில் வீட்டில் மாவா தயாரித்து விற்ற 2 பேர் கைது: 35 கிலோ மாவா, மிக்ஸி, 2 பைக் பறிமுதல்

தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டையில் வீட்டில் மாவா தயாரித்து விற்ற 2 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 35 கிலோ மாவா, மிக்ஸி, ஜார், 2 பைக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசால் போதை பாக்கு, மாவா, கஞ்சா போன்ற போதை பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ளது. போதை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்கும்விதமாக காவல்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுபோல் வண்ணாரப்பேட்டை சரகத்துக்கு உட்பட்ட காவல்நிலைய ஆய்வாளர்கள் தீவிர சோதனை நடத்தி போதை பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், வண்ணாரப்பேட்டை வீராக்குட்டி தெருவில் உள்ள ஒரு வீட்டில் மாவா தயாரித்து விற்பதாக தண்டையார்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு மாவா தயாரித்து கொண்டிருந்த 2 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். வீட்டில் இருந்த 35 கிலோ மாவா, 9 கிலோ ஜர்தா, மிக்ஸி, 2 மிக்ஸிஜார், 2 பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

பின்னர், கைது செய்யப்பட்ட இருவரையும் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது, வீராக்குட்டி தெருவை சேர்ந்த ஆதிகேசவன் (34), விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்ற குள்ள ராஜா (38) என்பதும், இவர்கள் பல நாட்களாக மாவா தயாரித்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட இருவரையும் ஜார்ஜ்டவுன் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதுதொடர்பாக முக்கிய குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் வண்ணாரப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: