மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஒய்எம்சிஏ கல்லூரி முதல்வர் போக்சோவில் கைது: போலீசார் நடவடிக்கை

சென்னை: ஒய்எம்சிஏ கல்லூரியின் உடற்கல்வி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை செய்த கல்லூரியின் முதல்வர் ஜார்ஜ் ஆப்ரகாம் போக்சோ சட்டத்தில் நேற்று கைது செய்யப்பட்டார். சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ வளாகத்தில் உடற்கல்வியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். வெளிமாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து உடற் கல்வியியல் படிப்பை படித்து வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் இந்த கல்லூரியின் முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் (50) மீது 23 வயது மாணவி ஒருவர் சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

‘வாட்ஸ்-அப் செல்போன் குறுந்தகவல் மூலம் ஆபாச தகவல்களை அனுப்பி பாலியல் ரீதியாக தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக புகாரில் கூறியிருந்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஜார்ஜ் ஆபிரகாம் மீது சைதாப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் இந்த வழக்கில் ஜார்ஜ் ஆபிரகாம் முன் ஜாமீன் பெற்றுள்ளார். இதையடுத்து ஜார்ஜ் ஆபிரகாம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உடற் கல்வியியல் பயிற்சி மாணவ, மாணவிகள் கடந்த மாதம் கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் சார்பில் 8 பேர் அடங்கிய விசாரணை குழு அமைக்கப்பட்டது. இந்த குழு விசாரணை நடத்திய போது, கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் 17 வயது மாணவி ஒருவர், தான் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது பாலியல் ரீதியாக ஜார்ஜ் ஆபிரகாம் அத்து மீறி நடந்து கொண்டதாக விசாரணை குழுவிடம் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அக்குழுவின் பரிந்துரையின் பேரில் அந்த மாணவி சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் ஜார்ஜ் ஆபிரகாம் மீது அனைத்து மகளிர் போலீசார் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நந்தனம் உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள குடியிருப்பில் தங்கி இருந்த அவரை நேற்று கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் ஜார்ஜ் ஆபிரகாம் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீசார் தரப்பில் தகவல் தெரிவித்தனர்.

Related Stories: