சென்னை: புதுச்சேரி, சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நிறுவனம் நடத்தி முதலீடு செய்தால் இரட்டிப்பாக பணம் மற்றும் நிலம் தருவதாக கூறி ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருச்சி, மன்னார்புரத்தை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாட்டில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பூர், சென்னை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் எல்பின் (ELFIN) நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பாக பணம் கிடைக்கும், நிலம் தருவோம், அதிக லாபம் தருவோம் என பொதுமக்களிடம் கூறி பணம் பெற்றுக் கொண்டு திருப்பி தராமல் ஏமாற்றி வந்த 7 நிறுவனம் மற்றும் அறம் மக்கள் நல சங்கம் டிரஸ்ட் அறம் டிவி சேனல் தமிழ்நாடு ராஜ்ஜியம் பத்திரிகை ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், பெரம்பலூர், கோவை, சென்னை ஆகிய 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
