டாஸ்மாக் டெண்டர் தொடர்பாக பொய்யான அறிக்கை அறப்போர் இயக்கம் திரும்ப பெறாவிட்டால் சட்ட நடவடிக்கை: அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரிக்கை

சென்னை: டாஸ்மாக் டெண்டர் தொடர்பாக வெளியிடப்பட்ட பொய்யான அறிக்கையை அறப்போர் இயக்கம் திரும்ப பெறாவிட்டால் அதன் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து உள்ளார்.

மதுவிலக்கு மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘மாநிலம் முழுவதிலும் 41 டாஸ்மாக் குடோன்களில் இருந்து பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கான டெண்டரின் மதிப்பு ஆண்டுக்கு ரூ.96 கோடி மட்டுமே. அறப்போர் இயக்கம் சொல்வது போல ரூ.1000 கோடி இல்லை. இடைத்தேர்தல் காரணமாக ஈரோடு தவிர்த்து பிற மாவட்டங்களில் டெண்டர் கோரப்பட்டது.

இந்த டெண்டரைப் பொறுத்தவரையிலும் டாஸ்மாக் தொடங்கப்பட்டதிலிருந்து எந்த நடைமுறை பின்பற்றப்படுகிறதோ அதே நடைமுறைதான் இப்பொழுதும் வெளிப்படையாகப் பின்பற்றப்பட்டிருக்கிறது. அரைகுறையான உண்மைக்குப் புறம்பான தகவல்களை அறப்போர் இயக்கம் வெளியிட்டிருக்கிறது. விவரங்களை முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் குற்றச்சாட்டு வெளியிடப்பட்டிருந்தால் அதனை உணர்ந்து குற்றச்சாட்டைத் திரும்பப்பெற்று வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில், பொதுமக்களிடம் அவப்பெயரை உண்டாக்க முயற்சி செய்ததற்காக அறப்போர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Related Stories: