பாஜக தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் சிடிஆர் நிர்மல்குமார் அதிமுகவில் இணைந்தார்!

சென்னை: பாஜக தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவராக இருந்த சிடிஆர்.நிர்மல்குமார் அக்கட்சியிலிருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இது தொடர்பாக நிர்மல்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலமுறை சிந்தித்து இன்று நான் பாஜகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்கிறேன். பல ஆண்டுகளாக எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையாகவும், நேர்மையாகவும் கட்சியின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்த வரை பணியாற்றினேன்.

இன்று விடைபெறுகிறேன்” என பதிவிட்டுள்ளார். மேலும் அந்த அறிக்கையில் அவர், “#420 மலையாக இருக்கும் நபரால், தமிழ்நாடு பாஜகவிற்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கே மிகப்பெரிய கேடு எனவும் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியதாவது:

பாஜக சகோதர சகோதரிகளுக்கு வணக்கம், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலநூறு முறை சிந்தித்து இன்று நான் பாஜவின் அணைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன். பல ஆண்டுகளாக எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையாக, நேர்மையாக கட்சியின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்த வரை பணியாற்றினேன் இன்று விடைபெறுகிறேன்!.

என் மீது நம்பிக்கை வைத்து என்னுடன் பயணித்த உங்களிடம் எனது இந்த முடிவிற்கான காரணத்தை தெரிவிப்பது எனது கடமை, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழ்நாடு பாஜக தலைமை தொண்டர்களையும் கட்சியையும் செருப்பாக பயன்படுத்தி கட்சியை பற்றி துளியும் சிந்திக்காது, சொந்த கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதை போன்ற அல்பத்தனம் எதுவும் இல்லை.

அதையும் தாண்டி தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள், கட்சி மற்றும் கமலாலயத்தின் ஒவ்வொரு செங்களையும் வியாபாரமாக்கி இடத்திற்கேற்ப நடித்து ஏமாற்றி வரும் தலைமையை பார்த்து ஒவ்வொரு நாளும் வேதனை அடைந்தது தான் மிச்சம். தொண்டர்களை மதிக்காது தான்தோன்றி தனம் இவற்றுடன் மனநலம் குன்றிய மனிதரை போல் செயல்படும் நபரால் கட்சி அழிவை நோக்கி செல்வதை ஒவ்வொரு நாளும் பார்க்க முடிகிறது.

2019-யில் இருந்த கட்சி அமைப்பில் தற்போது 20% கூட இல்லை அதைப்பற்றி துளியும் கவலை இல்லாமல் மாய உலகத்தில் சுற்றி வரும் ஒரு நபரால் கள எதார்த்தத்தை என்றும் உணர முடியாது, அதை உணர்த்த முயன்று என்னை போன்று பலர் தோல்வியுற்றோம்.

எல்லாவற்றிற்கும் மேலாக நான் ஒரு அமைச்சருடன் கடுமையான சட்ட போராட்டம் நடத்தி வரும் நிலையில் அந்த அமைச்சரை வெளியில் வீராவேசமாக பேசிவிட்டு திரைமறைவில் பேரம் பேசும் நபருடன் எப்படி பயணிக்க முடியும்? தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள் மற்றும் கட்சியை ஏமாற்ற நினைக்கும் ஒரு தலைமையை நம்பி எப்படி பயணிக்க முடியும்? என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் பாஜகவிலிருந்து விலகிய நிர்மல்குமார் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

Related Stories: