தேனி மாவட்டம் போடி அருகே காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரம்

தேனி: தேனி மாவட்டம் போடிக்கு அருகே வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் போடி மேற்கு தொடர்ச்சி பகுதியில் அடர்ந்த வனப்பகுதி சூழ்ந்த அரியவகை உயிரினங்களும் உயர்ந்த மரங்களும் உள்ள பகுதியாகும். தற்போது கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி வனப்பகுதிகளில் அவ்வப்போது காட்டுத்தீ பற்றியெரிந்து வருகிறது. இந்நிலையில் முந்தல் பகுதியில் இருந்து குரங்கணிக்கு செல்லும் பாதையில் உள்ள அடகுப்பாறை எனும் வனப்பகுதியில் சுமார் 100 க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் காட்டுத்தீ பற்றியெறிந்து வருகிறது.

இதனால் அரியவகை மரங்களும், மான்கள் உள்ளிட்ட விலங்குகள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் காட்டுத்தீ ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மளமள வென்று பரவி வருகின்றனது. இதனால் வனப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இந்த காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் சுமார் 10க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தற்போதுவரை ஈடுபட்டுவருகின்றனர். 

Related Stories: