*500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடந்த முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் தடகளப்போட்டியில் அசத்தினர்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம், திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் கடந்த 11ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.
அதில், தடகளம், செஸ், கைப்பந்து, இறகு பந்து, கபடி உள்ளிட்ட 5 பிரிவுகளாக போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இணையதளத்தில் பதிவு செய்த நபர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றனர். அதன்படி, சுமார் 30 ஆயிரம் பேர் போட்டியில் பங்கேற்க முன்பதிவு செய்திருந்தனர்.அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான விளையாட்டுப் போட்டிகள் ஏற்கனவே நடந்து முடிந்தது. அதைத்தொடர்ந்து, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான தடகளப் போட்டிகள் கடந்த இரண்டு நாட்களாக நடந்தது. அதன்படி, பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கான தனி நபர் தடகளப் போட்டிகள் நேற்று நடந்தது. அதில், மாவட்டம் முழுவதும் பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர், அதில், ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் தங்கள் திறமைகளை வெளிபடுத்தி அசத்தினர்.அதன்ெதாடர்ச்சியாக, இன்று முதல் 26ம் தேதி வரை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுப்பிரிவினருக்கான குழுப்போட்டிகள் நடைபெற உள்ளது. அதேபோல், வரும் 27 மற்றும் 28ம் தேதிகளில் பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவினருக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.