சென்னை: கோட்சேவின் கருத்துகளுக்கு அடிமை என்பதில் சிலருக்கு வெட்கம் இல்லாத போது கார்ல் மார்க்ஸ் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டது தங்களுக்கு பெருமைதான் என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி. சு.வெங்கடேசன் காட்டமாக பதிலளித்திருக்கிறார். சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆர்.என்.ரவி கார்ல் மார்க்ஸ் சிந்தனை இந்தியாவை சிதைத்துவிட்டதாகவும், தற்போது மார்க்ஸின் தத்துவம் புறந்தள்ளப்பட்டு இருப்பதாகவும் கூறினார். ஆபிரகாம் லிங்கனின் ஜனநாயகத்துக்கு உதாரணமாக காட்டுவதும் சார்லஸ் டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை பின்பற்றுவதும் மேற்கத்திய அடிமை மண் இல்லை என ஆளுநர் விமர்சித்திருந்தார்.