மேட்டூர்: மேட்டூர் அருகே கர்நாடக வனப்பகுதிக்கு மான் வேட்டைக்கு சென்றவர் மீது கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியாகியிருக்கலாம் என கிராம மக்கள் தேடி வருகின்றனர். இதனால், இரு மாநில எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழக, கர்நாடக எல்லையில் பாலாறு வனப்பகுதி இருக்கிறது. இங்கு காவிரியுடன், பாலாறு இணைகிறது. இங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் யானைகளும், மான்களும் அதிக அளவில் உள்ளன. மலையோர தமிழக கிராமங்களில் இருந்து செல்லும் சிலர், பாலாற்றை பரிசலில் கடந்து சென்று, கர்நாடக வனப்பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வகையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 2 பரிசல்களில் சென்றவர்கள், கர்நாடக வனப்பகுதியில் பாலாற்றங்கரையில் இருந்தபடியே வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த கர்நாடக வனத்துறையினர், அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். அதில் சிலர் தப்பி, மேட்டூர் பகுதி கிராமங்களுக்கு வந்து விட்டனர். ஆனால், மேட்டூர் கோவிந்தபாடியை சேர்ந்த காரவடையான் (எ) ராஜாவை காணவில்லை. இதனால் கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில், அவர் பலியாகி இருக்கலாம் என கிராமமக்கள் பாலாற்றங்கரையில் தேடி வருகின்றனர்.
இதனிடையே பாலாற்றங்கரையில் இருந்த 2 பரிசல்களில் இருந்த மான்களை கர்நாடக வனத்துறையினர் கைப்பற்றி சென்றுள்ளனர். மேலும், நேற்று மாலை கர்நாடக வனத்துறையினர் பரிசல் மூலம் பாலாற்றங்கரைக்கு வந்து துப்பாக்கி சூட்டில் யாரேனும் பலியாகி நீரில் மூழ்கியுள்ளனர் எனத் தேடிப்பார்த்து சென்றுள்ளனர். இதனால் இரு மாநில எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மீன் வேட்டைக்குச் சென்ற தமிழக மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறை துப்பாக்கி சூடு நடத்தியதில் செட்டிபட்டியைச் சேர்ந்த பழனி என்பவர் பலியானார். அப்போது, வெகுண்டெழுந்த கிராமமக்கள் பாலாற்றில் அமைக்கப்பட்டிருந்த கர்நாடக வனத்துறை அலுவலகத்தை அடித்து நொறுக்கி தீயிட்டு கொளுத்தினர். இதனால் மீண்டும் அது போன்ற சம்பவம் நடந்துவிடக்கூடாது என்பதற்காக பாலாற்றில் உள்ள கர்நாடக வனத்துறை சோதனைசாவடிக்கு கர்நாடக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.