சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரம்

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில், கொசு ஒழிப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொசு ஒழிப்பு நடவடிக்கையாக, நேற்று (15.02.2023) புதன்கிழமை ஒரே நாளில் மட்டும் மழைநீர் வடிகாலில் 508.45 கி.மீ. நீளத்திற்கு கொசுக்கொல்லி நாசினி தெளித்தும், 534.28 கி.மீ நீளத்திற்கு கொசு ஒழிப்பு புகைபரப்பியும், நீர்நிலைகளில் 121.87 கி.மீ. நீளத்திற்கு ட்ரோன் மற்றும் படகுகள் மூலம் கொசுக்கொல்லி நாசினி தெளிக்கப்பட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், 4,056 தெருக்களில் வாகனங்கள் மற்றும் கையினால் இயக்கும் இயந்திரங்கள் மூலம் கொசு ஒழிப்புப் புகைபரப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 102 தெருக்களில் உள்ள மழைநீர் வடிகாலில் தேங்கியிருந்த தண்ணீர் பம்பிங் செய்யப்பட்டு நீர்நிலைகளுக்கு அனுப்பப்பட்டது. கொசு ஒழிப்பு பணிகளுக்காக நவீன இயந்திரங்களான 4 ரோபோடிக்  இயந்திரங்கள், 3 சிறிய மற்றும் 2 பெரிய ஆம்பிபியன் இயந்திரங்கள் ஆகியவற்றின் மூலம் நீர்நிலைகளில் உள்ள ஆகாயத்தாமரைகள் முறையாக அகற்றப்பட்டு, கொசுக்கொல்லி மருந்து தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

இதன் தொடர்ச்சியாக, பெருநகர சென்னை மாநகராட்சி, வி.க.நகர் மண்டலம், வார்டு-74க்குட்பட்ட பனைத்தோப்பு இரயில்வே காலனியில் உள்ள கால்வாயில் கொசு ஒழிப்பு எண்ணெய் பந்துகள் மூலம் தீவிர கொசுப்புழுக்கள் ஒழிப்புப் பணி மேற்கொள்ளப்படுவதை மேயர் ஆர்.பிரியா இன்று (16.02.2023) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  இந்த ஆய்வின்போது, மண்டல அலுவலர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: