கோவை நீதிமன்றம் அருகே பட்டாக்கத்தியால் வாலிபரை சுற்றிவளைத்து வெட்டிக்கொலை: தடுக்க வந்த நண்பருக்கும் வெட்டு

கோவை: கோவை நீதிமன்றம் அருகே வாலிபர் சரமாரி வெட்டி கொல்லப்பட்டார். தடுக்க முயன்ற நண்பரையும் வெட்டிவிட்டு 4 பேர் கும்பல் தப்பியது. கோவை கீரணத்தம் பகுதியை சேர்ந்தவர் கோகுல் (25). கூலி தொழிலாளி. இவர் மீது பல்வேறு பகுதியில் அடிதடி மோதல் வழக்குகள் உள்ளன. கடந்த 2021 டிசம்பர் 20ம் தேதி இரவு ரத்தினபுரியை சேர்ந்த குரங்கு ஸ்ரீராம் (22) என்பவர் கொலையில், கோகுல் மற்றும் கூட்டாளிகள் சுஜி மோகன், மணிகண்டன், ரவீந்திரன், கவுதம் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த கொலையின்போது குரங்கு ஸ்ரீராமுடன் இருந்த அவரது நண்பர் கவாஸ்கான் (27) தப்பினார். இதையடுத்து ஸ்ரீராமின் கூட்டாளிகள், கோகுலை பழிவாங்க திட்டமிட்டு காத்திருந்தனர். இனால் அவர் கோவையில் தங்காமல் இடங்களை மாற்றி மாற்றி சுற்றி திரிந்தார்.

இந்நிலையில் அடிதடி மோதல் வழக்கில் ஜாமீன் கையெழுத்து போடுவதற்காக கீரணத்தம் பகுதியை சேர்ந்த நண்பர் மனோஜுடன் (25) கோவை நீதிமன்றத்துக்கு கோகுல் நேற்று காலை 11 மணிக்கு வந்தார். கையெழுத்து போட்டுவிட்டு வெளியே கோபாலபுரம் 2வது வீதியில் வந்தபோது 4 பேர் 2 அடி நீள பட்டா கத்தியுடன் அவரை சுற்றிவளைத்து கழுத்தில் வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் கோகுல் பரிதாபமாக இறந்தார். அந்த கும்பலை தடுக்க முயன்ற மனோஜின் தலையில் ஒருவர் வெட்டினார். பின்னர், அவர்கள் பைக்கில் ஏறி தப்பினர்.

இந்த காட்சிகள் அங்கேயிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த மனோஜ், கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். போலீசார் சிசிடிவி கேமராவில் பதிவான வாலிபர்கள், வாகனத்தின் பதிவு எண் வைத்து விசாரித்தனர். இதில் அவர்கள், ரத்தினபுரியை சேர்ந்த சூர்யா (24), வெள்ளலூரை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் (26), சித்தாபுதூர் கவாஸ்கான் (27), ரத்தினபுரியை சேர்ந்த ஒன்றரை என அழைக்கப்படும் கவுதம் (27) என தெரியவந்தது. அவர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட விவகாரம் கோவையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

* கத்தி வைத்திருந்த கோகுல்

நீதிமன்றத்திற்கு வந்த கோகுல் தனது இடுப்பு பகுதியில் வளைந்த நீண்ட கத்தி வைத்திருந்தார். தன்னை எதிரிகள் பின் தொடர வாய்ப்புள்ளதை அறிந்து அவர் எப்போதும் கத்தியுடன் சுற்றி வந்துள்ளார். டீ குடிப்பதற்காக அவர் நாற்காலியை எடுக்க சென்றபோது எதிரிகள் சுற்றிவளைத்தனர். அவர் தன்னிடம் இருந்த கத்தியை எடுக்கும் முன் அவர்கள் வெட்டிவிட்டதாக தெரிகிறது.

* காதலியை இன்று திருமணம் செய்ய திட்டம்

கோகுல் கோவையை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண்ணை இன்று கோயிலுக்கு அழைத்து சென்று திருமணம் செய்து உறவினர், நண்பர்களுக்கு விருந்து போட ஏற்பாடு செய்திருந்தார். கோர்ட்டில் ஜாமீன் கையெழுத்து போட்ட பின்னர், காதலியை சந்திக்க அவர் திட்டமிட்டிருந்தார். இந்த விவரம் தெரிந்த கும்பல், பின் தொடர்ந்து வந்து கொலை செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories: