சபரிமலையில் விமான நிலையம் அமைக்க ஒன்றிய அரசு ஆய்வு

புதுடெல்லி: சபரிமலை விமான நிலையம் தொடர்பாக கேரள அரசு வழங்கிய பல்வேறு தகவல்கள் குறித்து ஒன்றிய அரசு ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக மாநிலங்களவையில் ஜான்பிரிட்டாஸ் எம்பி எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் அளித்த பதில் வருமாறு: சபரிமலைக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அங்கு விமான நிலையம் அமைப்பது தொடர்பாக பல்வேறு பரிந்துரைகளை கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் கேரள தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் சார்பில் ஒன்றிய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

பசுமை விமான நிலைய கொள்கைப்படி அங்கு புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பாக  இந்திய விமான நிலைய ஆணையம் , சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் , பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவற்றுடன் கலந்தாலோசித்து கேரள தொழில்துறை மேம்பாட்டு கழத்தின் முன்மொழிவு பரிசீலிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம், இந்திய விமான நிலைய ஆணையம் ஆகியவற்றிடம் அங்கு புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பான தொழில்நுட்ப-பொருளாதார சாத்தியக்கூறு ஆய்வு  அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டது. அந்த அறிக்கை அடிப்படையில் 2022 நவம்பர் 22ம் தேதி பசுமை விமான நிலையங்கள் குறித்த 32வது வழிநடத்தல் குழுவின் முன் முன்மொழிவு வைக்கப்பட்டது.

அந்த கூட்டத்தில் நடந்த விவாதத்தின் அடிப்படையில் சபரிமலையில் நிலம் கிடைப்பது, விமான நிலையம் அமைக்க அனைத்து அனுமதிகளும் இலவசமாக கிடைப்பது,  அங்கு விமான நிலையம் அமைக்க தேவையான அனைத்து தகவல்களையும் தனியார் நிறுவனம் மூலம் பெறுவது, வருவாய் விகிதம் கணக்கிடுவது போன்ற கேள்விகள் தற்போது கேரள அரசிடம் இருந்து பெறுவதற்கு தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன.

Related Stories: