கல்லூரி பயிலும் எஸ்.சி, எஸ்.டி மாணவர்கள் கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்: ஆதிதிராவிடர் நலத்துறை தகவல்

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்ட அறிக்கை: போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கான இணையதளம் கடந்த ஜன.30ம் தேதி திறக்கப்பட்டது. இத்திட்டங்களின் கீழ் பயன்பெற தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் இன மாணவர்களிடமிருந்து (கல்லூரியில் பயில்பவர்கள் மட்டும்) புதிய மற்றும் புதுப்பித்தலுக்கான கல்வி உதவித் தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2022-23ம் கல்வியாண்டு முதல் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை பெற்ற மாணவர்களே இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும் என்பதால், ஆதார் எண், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண், ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு எண், இணையவழியில் பெறப்பட்ட வருமான சான்று மற்றும் சாதி சான்று உள்ளிட்ட இன்ன பிற ஆவணங்களுடன் https://tnadtwscholarship.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மாணவர்கள் பயிலும் கல்லூரிகள் மூலம் அக்கல்லூரியின் பற்று அலுவலர் முன்னிலையில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பம் பதிவிடும் நடைமுறை குறித்த குறும் படம்  மற்றும் மாவட்ட அளவில் உதவி பெற அணுக வேண்டிய அலுவலர்கள் குறித்த விவரம் கல்வி உதவித்தொகை இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க போதுமான கால அவகாசம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஆகவே, மாணவர் அனைவரும் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Related Stories: