மது அருந்த பணம் தராததால் பீர் பாட்டிலால் குத்தி தாயை கொன்ற மகன்: வியாசர்பாடியில் பரபரப்பு

பெரம்பூர்: மது அருந்த பணம் தராததால் பீர் பாட்டிலால் குத்தி தாயை ெகான்ற மகனை போலீசார் கைது செய்தனர். வியாசர்பாடி சாஸ்திரி நகர் 11வது தெருவை சேர்ந்தவர் அப்புனு (50). காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது  மனைவி கண்ணகி (45). இவர்களுக்கு அஜய் (எ) லூசு அஜய் (22) என்ற மகனும், அமலா என்ற மகளும் உள்ளனர். அமலா திருமணமாகி கணவருடன் வசிக்கிறார். லூசுஅஜய் ரயில்வே ஒப்பந்த பணிகளில் கூலி வேலை செய்து வந்தார்.

இவர், போதைக்கு அடிமையானதால் ஒப்பந்ததாரர்கள் வேலையை விட்டு நிறுத்தியுள்ளர். தற்போது வேலையில்லாமல் ஊர் சுற்றி வந்த இவர் அடிக்கடி குடித்துவிட்டு, தன் தாயிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அப்புனு வேலைக்கு சென்றிருந்த நிலையில், லூசுஅஜய்  அதிகாலை 4 மணிக்கு போதையில் தாயிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டிருந்தார்.

அவர் தர மறுத்து கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லூசு அஜய், கையில் வைத்திருந்த பீர்பாட்டிலை உடைத்து தாயின் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் கொடூரமாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த கண்ணகி வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு, ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் எம்கேபி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது, ரோந்து பணியில் இருந்த போலீசார் உடடியாக சம்பவ இடத்திற்கு சென்று, கண்ணகியை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, தீவிர சிகிச்சை பரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார், தப்பி ஓடிய லூசுஅஜயை நேற்று முன்தினம் மதியம் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், மகா சிவராத்திரி வருவதால், சிவபெருமானுக்கு வேண்டிக்கொண்டு மாலை அணிந்து, குடிக்காமல்  இருக்கும்படி லூசு அஜயிடம் கண்ணகி கூறியுள்ளார். தாயின் பேச்சை கேட்டு லூசுஅஜயும் சிவராத்திரிக்காக  மாலை அணிந்து 2, 3 நாட்கள் குடிக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில்,  மீண்டும் மாலை அணிந்து கொண்டே அவர் குடிக்க தொடங்கியதால், தாய் கண்ணகி மாலை  அணிந்து குடிக்க வேண்டாம் என கண்டித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த லூசு அஜய் பீர்பாட்டிலால் தாயை குத்தியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தார். இந்நிலையில், மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த கண்ணகி நேற்று முன்தினம் இரவு 1 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து, கொலை வழக்காக மாற்றி விசாரித்து வருகின்றனர். சாமிக்கு மாலை போட்டுக் கொண்டால் மகன் திருந்தி விடுவான் என்ற எண்ணத்தில் சிவராத்திரிக்கு மாலை அணிந்து மகனை திருத்த முயற்சி செய்த தாய், மகனால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் வியாசர்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: