புதுச்சேரி சாராயக்கடைக்கு செல்ல ஆற்றில் செம்மண் சாலை அமைப்பு: பள்ளம் தோண்டி தடுத்த போலீஸ்

நெல்லிக்குப்பம்: கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த முள்ளிகிராம்பட்டு கஸ்டம்ஸ் சாலையோரத்தில் தென்பெண்ணையாறு செல்கிறது. ஆற்றின் தென்கரையில் தமிழக எல்லைப்பகுதியும், வடக்கு கரையில் புதுச்சேரி பகுதியும் உள்ளன. தமிழக எல்லைப்பகுதி முடிவடைந்து, புதுச்சேரி மாநில எல்லை துவங்கும் இடத்தில் ஆற்றையொட்டி சாராயக்கடை உள்ளது. இந்த கடையில் சாராயம் குடிக்க தமிழக குடிமகன்கள் அதிகம் பேர் சென்று வருகின்றனர்.

இந்த கடைக்கு எளிதாக வந்து செல்லும் வகையில் முள்ளிகிராம்பட்டு பகுதியில் இருந்து இருசக்க வாகனங்களில் சாராயக்கடைக்கு வந்து செல்லும் வகையில் சாராயக்கடை உரிமையாளர்கள் சார்பில் ஆற்றில் செம்மண் சாலை அமைக்கப்பட்டு இருந்தது. வடகிழக்கு பருவமழையின் போது ஏற்பட்ட வெள்ளத்தில் இந்த சாலை அடித்து செல்லப்பட்டது. தற்போது ஆற்றில் நீர் வரத்து இல்லாததால் ஆற்றை கடந்து குடிமகன்கள் சென்று வருகின்றனர். ஆற்று மணலில் இருசக்கர வாகனங்கள் சிக்கிக்கொள்வதோடு, தள்ளிக் கொண்டு செல்கின்றனர்.

தமிழக குடிமகன்கள் வசதிக்காக சாராயக்கடை நடத்துவோர் முள்ளிகிராம்பட்டு கஸ்டம்ஸ் சாலையிலிருந்து சாராயக்கடை வரை சமீபத்தில் மீண்டும் செம்மண் சாலை அமைத்தனர். தகவலறிந்த நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் ஆற்றில் செல்ல முடியாத வகையில் சாலையின் குறுக்கே பொக்லைன் இயந்திரம் மூலம் நேற்று பள்ளம் தோண்டினர்.

தொடர்ந்து பண்ருட்டி வருவாய் வட்டாட்சியர் ஆனந்தி, நீர்வள ஆதார அமைப்பு உதவி பொறியாளர் பாலாஜி, நெல்லிக்குப்பம் வருவாய் ஆய்வாளர் அன்வர்தீன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் தமிழக எல்லை பகுதியான தென்பெண்ணையாற்றுக்கு வந்து ஆய்வு செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: