பஸ் படிக்கட்டில் தொங்கும் மாணவர்கள் மீது போலீசில் புகார்: ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அறிவுறுத்தல்

சென்னை: மாணவர்கள்,ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களின்  அறிவுரையை கேட்காமல் மீறி செயல்பட்டால் காவல் நிலையத்தில்  புகார் தெரிவிக்கலாம் என போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்கச் செய்ய ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நிலையான இயக்க நெறிமுறைகள் ஏற்கனவே சுற்றறிக்கை மூலம் வலியுறுத்தப்பட்ட நிலையில், ஒரு சில பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டு பயணம் தொடருவதால் மீண்டும் கீழ்வரும் இயக்க நெறிமுறைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தப்படுகிறது.

அதன்படி, வழித்தடங்களில் ஏதேனும் மாணவர்கள் படியில் தொங்க நேரிட்டாலோ அல்லது உயிருக்கு பாதுகாப்பற்ற முறையில் பயணிக்க முற்பட்டாலோ அந்த பேருந்தை நிறுத்தி படிக்கட்டு மற்றும் முறையற்ற பயணத்தை தவிர்க்க மாணவர்களை அறிவுறுத்த வேண்டும். மாணவர்கள், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களின் அறிவுரையை கேட்காமல் மீறி செயல்பட்டு, நிலைமை கட்டுப்பாட்டை மீறினால் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பேருந்து இயக்கத்தை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் ஓரமாக நிறுத்தி அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது காவல் துறை அவசர அழைப்பு 100 எண்ணுக்கோ மற்றும் மாநகர போக்குவரத்து கழக வான்தந்தி பிரிவுக்கும் தகவல் தெரிவித்து புகார் அளித்திட வேண்டும்.

பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தினை உறுதி செய்வது ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களின் பொறுப்பு என்பதனை உணர்ந்து பணிபுரிய வேண்டும். இவ்வாறு  சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: