பூகம்ப பூமியில் இந்தியாவின் ’ஆபரேஷன் தோஸ்த்'மீட்புப் பணி... தற்காலிக மருத்துவமனை அமைத்து வீரர்கள் மக்களுக்கு உதவிக்கரம்!!

துருக்கி : சக்திவாய்ந்த பூகம்பங்களால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கும் துருக்கியில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் இந்திய பேரிடர் மேலாண் படையினரும் இந்திய ராணுவ வீரர்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். துருக்கி, சிரியா  எல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட மூன்று ஆற்றல் மிக்க பூகம்பங்களால்  எல்லை நகரங்களில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இரண்டு நாடுகளிலும் பூகம்பத்திற்கு  பலியானோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது.  கட்டிட இடிபாடுகளை தோண்ட தோண்ட ஏராளமான சடலங்கள் கண்டெடுக்கப்பட்டு வருவதால்,  உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்  என்று அஞ்சப்படுகிறது.

இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை காப்பாற்றும் வகையில் துருக்கி சென்றுள்ள இந்திய பேரிடர் மேலாண் படையினர் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.  மனிதாபிமான அடிப்படையிலான  இந்த சேவைக்கு ‘ஆப்ரேஷன் தோஸ்த்’என்று பெயரிடப்பட்டுள்ளது.  தற்போது துருக்கியில் நூர்தாஹி பகுதியில் முகாமிட்டு தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் இந்திய வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.பேரிடர் மேலான் படையை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் பூகம்பம் பாதித்த பகுதிகளில், மீட்பு பணியில் களமிறங்கிய உள்ளனர். நவீன கருவிகள் மற்றும் மோப்ப நாய்களை பயன்படுத்தி கட்டிட இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை இந்திய வீரர்கள் மீட்டு வருகின்றனர்.  

பூகம்பத்தால் பெரும் பாதிப்பிற்கு உள்ளான ஹாடே நகரத்தில் தற்காலிக மருத்துவமனையை அமைத்துள்ள இந்திய ராணுவம்,  காயமடைந்த மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது.  இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் ராணுவ வீரர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகித்து வருகின்றனர்..தொடர்ந்து இந்தியாவில் இருந்து 6வது கட்ட நிவாரணப் பொருட்கள் துருக்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: