கூலி தொழிலாளியை தாக்கி வழிப்பறி: சிறுவன் உள்பட இருவர் சிக்கினர்

அண்ணா நகர்: சென்னை கோயம்பேடு சின்மயா நகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (41). இவர் கோயம்பேடு பழ மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 1ம் தேதி அதிகாலை 3 மணி அளவில்  வழக்கம்போல் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு  வேலைக்கு செல்வதற்கு கோயம்பேடு அவ்வை திருநகர் வழியாக நடந்து சென்றுள்ளார். அவ்வழியே பைக்கில் வந்த இருவர் ஆறுமுகத்தை வழி மடக்கி  மிரட்டி பணம் மற்றும் செல்போனை கேட்டுள்ளனர். கொடுக்க மறுத்த ஆறுமுகத்தை சரமாரியாக தாக்கி கீழே தள்ளி விட்டு பாக்கெட்டில் உள்ள இரண்டு செல்போன்களை அவர்கள் பறித்துச்சென்றுள்ளனர்.

இதுகுறித்து ஆறுமுகம் கோயம்பேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குபதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் இரண்டு பேர் முகம் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் இருவரை தேடி வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு நெற்குன்றம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அவ்வழியே பைக்கில் வந்த இருவர் பயந்து  தப்ப முயன்றனர். அவர்களை போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், ராமாபுரம் பகுதியை சேர்ந்த சஞ்சய்குமார் (19), கூட்டாளி 17 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஆகிய இருவரும் ஆறுமுகத்தை தாக்கி செல்போனை பறித்து சென்றது தெரியவந்தது.

மேலும் கைது செய்யப்பட்ட சஞ்சய்குமார் மற்றும் சிறுவன் ஆகிய இருவரும் விருகம்பாக்கம், வளசரவாக்கம், கோயம்பேடு ஆகிய பகுதிகளில் இரவு நேரத்தில் தனியாக நடந்து செல்பவர்களை குறி வைத்து தாக்கி பணம் மற்றும் செல்போன்களை பறித்து செல்வதாகவும், வீட்டின் முன்பு நின்று கொண்டிருக்கும் பைக்குகளை திருடி செல்போன் மற்றும் பைக்குகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்து அந்த பணத்தில் ஜாலியாக ஊர் சுற்றுவோம் எனவும் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் கோயம்பேடு, விருகம்பாக்கம் ஆகிய காவல்நிலையங்களில் திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.

கோயம்பேடு மார்க்கெட் கூலித் தொழிலாளர்கள் கூறும்போது, ‘‘கோயம்பேடு பூ பழம் காய்கறி ஆகிய மார்க்கெட்டில் வேலை செய்வதற்கு அதிகாலை 3 மணி அளவில்  மார்க்கெட் வருவோம். இதை பயன்படுத்தி வழிப்பறி கொள்ளையர்கள் நோட்டம் விட்டு கூலி தொழிலாளர்களை வழி மடக்கி  சரமாரியாக தாக்கி  வழிப்பறியில் ஈடுபட்டு செல்போன் மற்றும் பணத்தை பறித்து செல்லும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. எனவே போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்’’ என்றனர்.

Related Stories: