கொழும்பு: தமிழர்களுக்கு அதிகாரமளிக்கும் 13வது திருத்தம் முழுமையாக
அமல்படுத்தப்படும் என இலங்கை அதிபர் கூறினார். இலங்கை நாடாளுமன்ற
கூட்டத்தில் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே நேற்று பேசுகையில், ‘‘ஒன்றுபட்ட
இலங்கையின் கீழ் அதிகாரபரவல் அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக
நாட்டில் எந்த பிரிவினையும் ஏற்படுத்தப்படாது என்று பல்வேறு
சந்தர்ப்பங்களில் நான் தெரிவித்துள்ளேன்.
இலங்கையில் வாழும்
தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் அளிப்பதற்கு அரசியல் சட்டத்தின் 13வது
திருத்தத்தை அமல்படுத்துவது அத்தியாவசியம் ஆகும். வரும் 2026ம் ஆண்டில்
திவால் நிலையில் இருந்து இலங்கை மீண்டு வந்து விடும். சர்வதேச நாணய
நிதியத்திடம் இருந்து ரூ.23,937 கோடி கடன் பெறுவதற்கான பேச்சுவார்த்தை
இறுதி கட்டத்தில் உள்ளது. அதே போல் சீனா மற்றும் இதர நாடுகளுடன் கடன்
மறுசீரமைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பழைய விஷயங்களை
மறந்து விடுவோம். தற்போதைய சிக்கலில் இருந்து விடுபடுவதற்கு அனைவரும்
ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
மக்களின் விருப்பம் இல்லாமல்
எடுக்கப்பட்ட சில முடிவுகளுக்கு வரும் காலங்களில் சாதகமான பலன்கள்
கிடைக்கும். புகழை பெறுவதற்காக பதவியில் நான் அமரவில்லை. கடுமையான
சிக்கலில் உள்ள நாட்டை மீண்டும் கட்டி எழுப்ப விரும்புகிறேன். ஆம்,
நாட்டின் நலனுக்காக மக்கள் விருப்பம் இல்லாத முடிவுகளை எடுக்க தயாராக
இருக்கிறேன்.இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இந்த முடிவுகளின்
பலன்கள் தெரிய வரும்’’ என்றார்.