செங்கல்பட்டு ஆத்தூரில் ரூ.43 கோடியில் அரசினர் பாதுகாப்பு இல்லம், ஒருங்கிணைந்த பயிற்சி மைய கட்டிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் ரூ.43 கோடியிலான அரசினர் பாதுகாப்பு இல்லம் மற்றும் ஒருங்கிணைந்த பயிற்சி மைய கட்டிடத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், ஆத்தூரில் ரூ.15.95 கோடி மதிப்பிலான அரசினர் பாதுகாப்பு இல்ல புதிய கட்டிடம் மற்றும் ரூ.27 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள சமூக மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையக் கட்டிடம் ஆகிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு இந்த கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டுவரும் சமூகப் பாதுகாப்புத் துறை மாநிலத்தில் குழந்தைகளின் நலன் மற்றும் பாதுகாப்பிற்கான திட்டத்தை செயல்படுத்த பல்வேறு வகையான குழந்தை பராமரிப்பு நிறுவனங்களை நிறுவி பராமரித்து வருகிறது. சட்டத்திற்கு முரணாக செயல்பட்டதாக கருதப்படும், முரணாக செயல்பட்ட சிறார்களை தங்க வைத்து பராமரிப்பு மற்றும் மறுசீராக்க பயிற்சிகளை அளிப்பதற்காக செயல்படும் அரசினர் பாதுகாப்பு இல்லத்திற்கு செங்கல்பட்டு மாவட்டம், ஆத்தூரில் ரூ.15.95 கோடி மதிப்பீட்டில் 37,146 சதுர அடி பரப்பளவில் 100 சிறார்கள், இளைஞர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய ஒரு புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது.

அதேபோன்று, செங்கல்பட்டு மாவட்டம், ஆத்தூரில் ரூ.27 கோடி மதிப்பீட்டில், 80,326.36 சதுர அடி பரப்பளவில் சமூக மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையம் கட்டப்பட உள்ளது. இப்பயிற்சி மையத்தில் மாவட்ட சமூக நல அலுவலர்கள், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் அங்கன்வாடிப் பணியாளர்கள், காவல் துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசுப் பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் சமூகப் பணியாளர்கள், கல்வி நிறுவனங்கள் என அனைத்து தரப்பினருக்கும், குழந்தைகள் மற்றும் மகளிர் நலன், உரிமைகள், மேம்பாடு, அதிகார பரவலாக்கம் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படும். இந்த கட்டிட பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் இறையன்பு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: