திருமணம் செய்ய மறுத்த காதலனை போலீசில் சிக்க வைக்க கூட்டு பலாத்காரம் என புகார் அளித்த இளம்பெண்ணின் நாடகம் அம்பலம்: காவல் துறையின் விசாரணையில் உண்மை வெளியானது

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், சாலவாக்கம் அருகே காதலன் திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் ஆத்திரம் அடைந்த இளம்பெண், தன்னை கூட்டு பலாத்காரம் செய்ததாக புகார் அளித்து நாடகம் ஆடியது அம்பலமாகியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்தவர் கலா (21) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கரூர் வைஸ்யா வங்கியில் டெலிகாலராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு, காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் காவல் நிலையத்துக்கு வந்த அனுசுயா, தன்னை 4 பேர் காரில் கடத்தி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரளித்தார். இதனால், அதிர்ச்சியடைந்த காவல் துறையினர் உடனடியாக விசாரணையை தொடங்கினர்.

அதில், சக தோழியை சந்திப்பதற்காக, சைதாப்பேட்டையில் இருந்து செங்கல்பட்டு ரயில் நிலையத்துக்கு வந்து காத்திருந்தேன். அப்போது, வெளியே நின்றிருந்த நான்கு இளைஞர்கள் என்னிடம் பேச்சு கொடுத்து காரில் ஏற்றி கடத்தினர். பின்னர், சாலவாக்கம் காவல் எல்லைக்கு உட்பட்ட வனப்பகுதிக்கு கொண்டு சென்று கூட்டு பலாத்காரம் செய்தனர் என புகாரில் தெரிவித்திருந்தார்.  இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார் இளம்பெண்ணை செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக உட்படுத்தினர். இதனைத் தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த மலையாங்குளம் பகுதியை சேர்ந்த சலீம் என்பவரை இளம்பெண் கலா 3 மாத காலமாக காதலித்து வந்துள்ளார்.

திருமணம் செய்து கொள்வதாக சலீம் அழைத்ததின்பேரில், செங்கல்பட்டு ரயில் நிலையத்துக்கு வந்துள்ளார். ரயில் நிலையம் அருகே காத்திருந்த சலீமுடன் பைக்கில் மலையாங்குளம் வீட்டுக்கு கலா சென்றுள்ளார். இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். கலா திருமணம் செய்ய கோரியபோது சலீம் மறுத்துள்ளார். இதனையடுத்து, சலீமை சிக்க வைக்க, தன்னை கூட்டு பலாத்காரம் செய்ததாக கலா நாடகமாடியது காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர், போலீசார் அந்த பெண்ணை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இது குறித்து மாவட்ட போலீஸ் எஸ்பி சுதாகர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

சாலவாக்கம் கூட்டு பாலியல் பலாத்கார விவகாரத்தில், உண்மைக்கு புறம்பான புகாரை 21 வயது பெண் கொடுத்தது காவல் துறை விசாரணையில் தெரியவந்தது. சென்னையில் இருந்து ஒரு பெண் செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு வந்ததாகவும், அங்கிருந்த நான்கு இளைஞர்கள் கருப்பு நிற காரில் கடத்தி, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக அப்பெண் 100க்கு அழைத்து  புகார் தெரிவித்தார். உடனடியாக காவல் துறை அப்பெண்ணை அணுகி விசாரணை செய்தனர். அப்பெண் சொல்லும் தகவல்கள் உண்மைக்கு முரண்பாடாகவே இருந்தது.

செங்கல்பட்டில் நான்கு பேரை பார்ப்பதற்காக வந்ததாக அப்பெண் கூறியவர்களை, காவல் துறையினர் தொடர்பு கொண்டபோது, எல்லாரும் வெவ்வேறு இடங்களில் இருப்பதாக சொல்லியுள்ளனர். ஒருவர், திசையன்விளை, மற்றொருவர் திருச்சி, இன்னும் ஒருவர் சென்னையில் இருப்பதாக கூறியுள்ளனர். அவர்களை பார்க்க வந்ததாக பெண் கூறியது, உண்மைக்கு புறம்பான பொய்யான தகவல். அப்பெண் விசாரணையில் உண்மையை சொன்னார். ஆனால் அது அவரின் தனிப்பட்ட கருத்து என்பதால் அதை சொல்ல முடியாது. அப்பெண் ஒருவரை சிக்கவைக்க, கூட்டு பாலியல் என நாடகமாடி பொய்யான புகாரளித்தது தெரிய வந்தது என எஸ்பி தெரிவித்தார்.

Related Stories: