ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணியில் நெடுஞ்சாலை, பொதுப்பணி துறையில் 1,083 காலியிடங்கள்: தேர்வுக்கு மார்ச் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம், டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணியில் நெடுஞ்சாலை, பொதுப்பணி, ஊரக வளர்ச்சி, நகர் ஊரமைப்பு துறையில் காலியாக உள்ள 1,083 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 4ம் தேதி கடைசி நாள். எழுத்து தேர்வு மே 27ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணிகளில் அடங்கிய 1,083 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலை பணியில் பணி மேற்பார்வையாளர், இளநிலை வரை தொழில் அலுவலர் பதவியில் 794 பணியிடங்கள், தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையில் இளநிலை வரை தொழில் அலுவலர் 236 இடங்கள், பொதுப்பணித்துறையில் இளநிலை வரை தொழில் அலுவலர் 18 இடங்கள், நகர் ஊரமைப்பு துறை வரைவாளர்(கிரேடு 3) 10 இடங்கள், தமிழ்நாடு சிறு தொழில் நிறுவனத்துறை முதலாள்(கிரேடு 2) 25 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பதவிகளுக்கான எழுத்து தேர்வுக்கு மார்ச் 4ம் தேதி வரை டிஎன்பிஎஸ்சியின் இணையதளம்(www.tnpsc.gov.in, www.tnpscexams.in) வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

இணைய வழி விண்ணப்பங்களை மார்ச் 9ம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் மார்ச் 11ம் தேதி இரவு 11.59 மணி வரை திருத்தம் செய்யலாம். இத்தேர்வுக்கான எழுத்து தேர்வு மே 27ம் தேதி நடைபெறுகிறது. எழுத்து தேர்வு சென்னை, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நடைபெறும். தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு  கட்டணம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இணையதளத்தில்  வெளியிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

Related Stories: