அமெரிக்காவில் உயிரிழப்பு, பார்வை பறிபோன விவகாரம் சென்னை கண் சொட்டு மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை: ஒன்றிய அரசு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

சென்னை: சென்னைக்கு அருகே உள்ள, தனியார் மருந்து நிறுவனம் உற்பத்தி செய்த கண் மருந்தில், அதிகளவு பாக்டீரியாவால், 55 பேரின் பார்வை பறிபோனது. மேலும்ஒருவர் உயிரிழந்ததின் காரணமாக, அமெரிக்கா உத்தரவால் ஒன்றிய அரசு அதிகாரிகள் அந்த நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை திருப்போரூரை அடுத்துள்ள ஆலத்தூரில் சிட்கோ உயிர் காக்கும் மருந்து தொழிற்பேட்டை வளாகம் உள்ளது. இங்கு, 30க்கும் மேற்பட்ட மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் ஒன்றான குளோபல் பார்மா என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்படும் ‘ஆர்ட்டிபிஷியல் டியர்ஸ்’ எனப்படும் கண் மருந்து உலகளவில் புகழ் பெற்றது. இந்த மருந்து அமெரிக்காவில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த மருந்தை கடந்த ஜனவரி மாதம் பயன்படுத்திய 55 பேருக்கு நிரந்தர பார்வை இழப்பு ஏற்பட்டதாகவும், ஒருவர் உயிரிழந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து குறித்து அமெரிக்க மருந்து தரக்கட்டுப்பாடு சோதனை கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மருந்தில் அளவுக்கதிகமான பாக்டீரியா கலந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. உடனடியாக, அமெரிக்க மருந்துகள் பாதுகாப்பு துறை இந்த கண் மருந்தை தடை செய்ததோடு, அனைத்து மருந்துகளையும் மருந்துக் கடைகள் மற்றும் மருத்துவமனைகளில் இருந்து திரும்பப் பெற்றது. மேலும், இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகள் மீண்டும் இந்தியாவுக்கு திருப்பியது.

இதுகுறித்த, விவரமான அறிக்கை அமெரிக்க மருந்தாய்வுக் கழகம் சார்பில் ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு குழுமம் சார்பில், நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் 5 பேர் கொண்ட குழுவினர் ஆலத்தூரில் உள்ள தொழிற் சாலையில் ஆய்வு மேற்கொண்டு, அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட மருந்துகளின் மாதிரிகளை எடுத்துச் சென்றனர்.

மேலும், இனி எந்த மருந்தையும் உரிய ஆய்வு முடிவுகள் வரும் வரை பயன்படுத்தக்கூடாது என்று தடை விதித்து அங்கு இருப்பு வைக்கப்பட்டிருந்து அனைத்து மருந்துகளையும், தனியாக ஒரு கிடங்கில் வைத்து பூட்டி சீல் வைத்தனர். இந்நிலையில், ஒன்றிய மருந்தாய்வு நிபுணர்கள் எடுத்துச் சென்ற மருந்தின் ஆய்வு முடிவுகள் வரும் வரை, புதிய மருந்து தயாரிப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே தொழிற்சாலை நிர்வாகத்தின் சார்பில், இதுபோன்ற கண் மருந்துகளை வேறொரு நிறுவனம் சார்பிலும் தயாரிக்கப்படுவதாகவும், 2 மருந்துகளின் மூலப்பொருள் ஒன்றுதான் என்பதால் தவறுதலாக தங்கள் நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்படுவதாகவும் சட்டப்பூர்வமாக இதை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டது.

Related Stories: