சென்னையில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட சுமார் ரூ.19.29 கோடி தங்க நகைகள், 2.70 கோடி ரொக்கம் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு

சென்னை: சென்னையில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட சுமார் ரூ.19 கோடியே 29  லட்சம் மதிப்புள்ள 6,643.3 சவரன் (53.2 கிலோ) தங்க நகைகள், ரொக்கம் ரூ.2,70,87,939/-, 1,487 செல்போன்கள், 425 இருசக்கர வாகனங்கள், 31 ஆட்டோக்கள், மற்றும்  18  நான்கு சக்கர வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சென்னை பெருநகர காவலில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட கொடுங்குற்றங்கள், கூட்டுக்கொள்ளை, வழிப்பறி, வீடு புகுந்து கொள்ளையடித்தல், சங்கிலி மற்றும் செல்போன் பறிப்பு, திருட்டு, மற்றும் செல்போன் காணாமல் போன வழக்குகளை விரைந்து விசாரித்து, குற்றவாளிகளை கைது செய்து, களவு சொத்துக்களை மீட்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவிட்டதின் பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின் பேரிலும், இணை ஆணையாளர்கள் வழிகாட்டுதலில் பேரிலும், துணை ஆணையாளர்கள் நேரடி கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் ஒருங்கிணைந்த தனிப்படை அமைக்கப்பட்டது.

மேற்படி காவல் குழுவினர் 12 காவல் மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட திருட்டு, வழிப்பறி வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து தங்க நகைகள், ரொக்கம்  இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் காவல் குழுவினர் சைபர் குற்றப்பிரிவு குழுவினருடன் இணைந்து, அவர்களது காவல் மாவட்டங்களில் உள்ள காணாமல் மற்றும் திருட்டு போன செல்போன்கள் தொடர்பான புகார்கள் மீது உரிய சட்டபூர்வமாகவும், இணையதள குற்ற தடயவியல் முறையிலும் விசாரணை மேற்கொண்டும், அவர்களிடமிருந்தும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றது.

கடந்த 01.01.2022 முதல் 31.12.2022 வரையில் சென்னை பெருநகர காவல், மண்டல இணை ஆணையாளர்கள் தலைமையில் செயல்படும்  புலன் விசாரணை காவல் குழுவினர் சென்னை பெருநகர காவல், 4 காவல் மண்டலங்களிலும், விடு புகுந்து திருட்டு, கொள்ளை, வழிப்பறி, சங்கிலி பறிப்பு, செல்போன் திருட்டு மற்றும் செல்போன் காணாமல் போன வழக்குகள் மற்றும் வாகன திருட்டு உட்பட சொத்து சம்பந்தப்பட்ட குற்ற வழக்குகளில் (Crime Cases) திறம்பட செயல்பட்டு, வடக்கு மண்டலத்தில் 338.350 சவரன் தங்க நகைகள், ரொக்கம் ரூ.1,90,62,799/-, 469  செல்போன்கள், 125 இருசக்கர வாகனங்கள், 6 ஆட்டோக்கள் மற்றும்  4 இலகுரக வாகனங்கள், மேற்கு மண்டலத்தில் 4473.300 சவரன் தங்க நகைகள், ரொக்கம் ரூ.31,77,790/-, 236 செல்போன்கள், 116 இருசக்கர வாகனங்கள்,

10 ஆட்டோக்கள், 8 இலகுரக வாகனங்கள், தெற்கு மண்டலத்தில் 520.121  சவரன்  தங்க நகைகள், ரொக்கம் ரூ.23,19,260/-, 426 செல்போன்கள், 105  இருசக்கர வாகனங்கள், 4 ஆட்டோக்கள், 4 இலகுரக வாகனங்ள் மற்றும் கிழக்கு மண்டலத்தில் 1311.530 கிராம் தங்க நகைகள், ரொக்கம் ரூ.25,28,090/-, 356 செல்போன்கள், 79 இருசக்கர வாகனங்கள், 11 ஆட்டோக்கள், 2 இலகுரக வாகனங்கள் என மொத்தம் சுமார் ரூ.19 கோடியே 29 லட்சம் மதிப்புள்ள 6,643.3  சவரன் (53.2 கிலோ) தங்க நகைகள், ரொக்கம் ரூ.2,70,87,939/-,  1,487 செல்போன்கள், 425 இருசக்கர வாகனங்கள், 31 ஆட்டோக்கள் மற்றும் 18 இலகுரக வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றில் பெரும்பாலான, தங்கநகைகள், இருசக்கர வாகனங்கள், செல்போன்கள் சென்னை மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து கைப்பற்றப்பட்டு கொண்டு வரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இன்று (04.02.2023) மாலை சென்னை எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற களவு சொத்துக்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீட்கப்பட்ட களவுச் சொத்துக்களை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். சென்னை பெருநகரில் தொடர்ந்து கொடுங்குற்றங்கள், கூட்டுக்கொள்ளை, வழிப்பறி, வீடு புகுந்து கொள்ளையடித்தல், சங்கிலி மற்றும் செல்போன் பறிப்பு, திருட்டு போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்தர்வின்படி தொடர்ந்து “Drive Against Crime Offenders” (DACO) என்ற திட்டத்தின் மூலம் சிறப்பு தணிக்கைகள் மேற்கொண்டு சொத்து சம்பந்தப்பட்ட வழக்கு குற்றவாளிகளிடமிருந்து நன்னடதை பிணை ஆவணம் பெற்றும், நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறி மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது, செயல்துறை நடுவர்களாகிய காவல் துணை ஆணையாளர்கள் மூலம் பிணையில் வரமுடியாது சிறை தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை பெருநகர காவல் துறையினர் மேற்கொண்டு வரும் இத்தகைய தொடர் நடவடிக்கையின் பயனாகவும், குற்ற வழக்குகளில் துரிதமாக புலன் விசாரணை செய்யப்பட்டு குற்றவாளிகளை உடனுக்குடன் கைது செய்யப்படுவதினால், குற்ற நிகழ்வுகள் கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு கணிசமாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2022ம் ஆண்டு சென்னை பெருநகரில் திருட்டு, ஆதாய கொலை, வழிப்பறி, கன்னக்களவு, சங்கிலிப்பறிப்பு, வாகனத் திருட்டு உட்பட சொத்து சம்பந்தப்பட்ட குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 117 குற்றவாளிகள் உட்பட மொத்தம் 495 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையாளர்கள் T.S.அன்பு, (வடக்கு), பிரேம் ஆனந்த் சின்கா, (தெற்கு), அனைத்து இணை ஆணையாளர்கள், அனைத்து துணை ஆணையாளர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: