வட்டிக்கு பணம் வாங்கிய பிரச்னையில் மூதாட்டியை கொடூரமாக கொன்ற ஆயுதப்படை போலீஸ்காரர் கைது: போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்கள்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் அடுத்த மேலேரி கிராமம், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் யசோதா அம்மாள்(75). இவரது கணவர் பலராமன் இறந்துவிட்டார். இவரது 3 மகள்கள், ஒரு மகனுக்கு திருமணமாகி சென்னை மற்றும் சித்தூர் பகுதிகளில் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். யசோதா அம்மாளுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் இருந்து கிடைக்கும் வருமானத்தில் தனியாக வசித்துவந்தார். கடந்த 29ம் தேதி மதியம் தனது வீட்டின் பின்புறம் உள்ள முட்புதரில் யசோதா அம்மாள் தலையில் அம்மிக்கல்லை போட்டு படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது வீட்டில் இருந்து 25 சவரன் நகைகள் கொள்ளைப்போயிருந்தது.

இதுகுறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். அத்துடன் கைரேகைகள் மற்றும் தடயங்களை வைத்து தீவிரமாக விசாரித்து வந்தனர். இதில், ‘’தனக்கு கிடைத்த நில வருவாய் மற்றும் தனது மகன், மகள்கள் வழங்கும் தொகையை வைத்து யசோதா அம்மாள் அந்த பகுதியை சேர்ந்த பலருக்கு வட்டிக்கு கடன் கொடுத்து வந்துள்ளார்’ என்று தெரியவந்தது. சம்பவத்தன்று யசோதா அம்மாளிடம் கடன் வாங்கியிருந்த அவரது உறவினரின் மகன் வாய்த்தகராறில் ஈடுபட்டதாகவும் யசோதா உள்பட பலரை ஏமாற்றி அவர் கார், பங்களா உள்ளிட்ட பல்வேறு வசதிவாய்ப்புகளுடன் வாழ்ந்து வருவதாகவும் போலீசாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த சதீஷ் (எ) சக்திவேல் (25) என்பவரை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், ‘’அவர் சென்னை ஆயுதப்படையில் காவலராக வேலை பார்த்து வருகிறார் என்பதும் யசோதா அம்மாளிடம் வட்டிக்கு ₹2 லட்சம் கடன் வாங்கியதும் அவற்றை வட்டியுடன் அசலை திருப்பி தருவதில் காலம் தாழ்த்தி வந்ததாகவும் தெரியவந்தது. இதுபற்றி போலீசார் கூறுகையில், ‘’கடந்த 28ம் தேதி இரவு சதீஷ் வாங்கிய கடனை உடனடியாக திருப்பி தரவேண்டும். இல்லையேல், அவரது பெற்றோரிடம் கூறிவிடுவேன் என யசோதா அம்மாள் மிரட்டியதால் சதீஷ் கோபம் அடைந்தார்.

அவரை வீட்டின் பின்பக்கம் அழைத்து சென்று, யசோதா அம்மாளின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்துவிட்டு, மறுநாள் காலை அவரது வீட்டில் இருந்த 25 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார்’ என்று தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சுங்குவார்சத்திரம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, ஆயுதப்படை காவலர் சதீஷை கைது செ செய்து அவரிடம் இருந்து 16 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர். மீதமுள்ள நகைகள் மற்றும் யசோதா அம்மாள் தவிர வேறு யார், யாரிடம் கடன் வாங்கியுள்ளார் என்று விசாரித்து வருகின்றனர்.

Related Stories: