பழனிசாமி தரப்பு வேட்பாளர் தென்னரசுவை ஆதரிக்க பாஜக தயார்.! அதிமுக பிரிந்து போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு குறையும்: அண்ணாமலை பேட்டி

சென்னை: பழனிசாமி தரப்பு வேட்பாளரை ஆதரிக்குமாறு ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாஜக தரப்பில் வேண்டுகோள் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார். அதிமுக சார்பில் ஒரே வேட்பாளர் நிறுத்தப்பட்டால் ஆதரிக்க தயார் என்று பழனிசாமியிடம் கூறினோம் எனவும் அண்ணாமலை பேசியுள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மாரடைப்பு காரணமாக கடந்த 4ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சிவப்பிரசாத் , தேமுதிக சார்பில் ஆனந்த் , நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக சார்பில் ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி என இரண்டு தரப்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக ஒ.பி.எஸ் தரப்பையும் உள்ளக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முடிவுகளை எடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இந்நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியே ஆலோசனைகளை மேற்கொண்டனர். இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது; பழனிசாமி தரப்பு வேட்பாளரை ஆதரிக்குமாறு ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாஜக தரப்பில் வேண்டுகோள் வைத்தோம்.

எங்கள் வேண்டுகோளை பன்னீர்செல்வம் ஏற்றுக்கொள்வார் என நம்புகிறோம். அதிமுக சார்பில் ஒரே வேட்பாளர் நிறுத்தப்பட்டால் ஆதரிக்க தயார் என்று பழனிசாமியிடம் கூறினோம். அதிமுகவில் நிலவும் பிரச்சனைகளுக்கு இன்று மாலைக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும். அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவதில்லை. அதிமுகவினர் பிரிந்து போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு குறையும் என்று கூறினோம். பழனிசாமி தரப்பு வேட்பாளர் தென்னரசுவை ஆதரிக்க பாஜக தயார். இரட்டை இலை சின்னத்தில் அதிமுக வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம் எனவும் பேசியுள்ளார்.

Related Stories: