மதுரை: ஜல்லிக்கட்டு போட்டிகளை தனி நபர்கள் நடத்த இது ஒன்றும் ஐபிஎல் மேட்ச் கிடையாது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. மதுரை மாவட்டம் அவனியாபுரத்தை சேர்ந்த முருகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ‘வரும் ஜனவரி 15ம் தேதியன்று நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவை, மாவட்ட நிர்வாகமே நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. எனவே, அவனியாபுரம் கிராமம் மற்றும் அனைத்து சமுதாய பிரதிநிதிகள் அடங்கிய கிராம பொது கமிட்டிக்கு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதிக்க உத்தரவிட வேண்டும்’ என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்,“ஜல்லிக்கட்டு போட்டி ஒன்றும் ஐபிஎல் விளையாட்டு கிடையாது. பல்வேறு போராட்டம், பிரச்சனைகளுக்குப் பிறகு ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகளை சில தனிநபர்கள் நடத்தியதின் காரணமாகவே பல்வேறு பிரச்சனைகள் எழுந்தன. எனவே, இதனை அரசு நடத்துவது தான் நல்லது. அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாக்கள் மிகவும் உலகப் புகழ் பெற்றவை. இவ்வாறு உள்ள சூழலில் இந்த விழாக்களை தனி நபர்கள் நடத்துவது பொருத்தமாக இருக்காது. எனவே அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசு நடத்துவது தான் சரியாக இருக்கும்,” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
